ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிகள் இரவோடு இரவாக புழல் சிறைக்கு மாற்றம்.. பின்னணி என்ன?
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அஸ்வத்தாமன், பொன்னை பாலு உட்பட 23 பேர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஹரிகரன், அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்கொடி சேகர், திமுக நிர்வாகி மகன் சதீஷ், வடசென்னை பாஜக நிர்வாகி அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் கட்சியில் இருந்த அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கட்சி வேறுபாடின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய அரசியல் பிரமுகர்களும், பிரபல ரௌடிகளும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்போ செந்தில் உள்ளிட்ட முக்கிய ரௌடிகள் பலர் போலீஸ் தேடலில் உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரௌடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், சம்பவம் செந்தில் உள்ளிட்டோர் மீது போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் அஸ்வத்தாமன் உட்பட மொத்தம் 26 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 10 பேர் குண்டர் சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் கூட்டு சதி உட்பட பல்வேறு சதிச்செயல்கள் அரங்கேறியுள்ளதால் அதுதொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அடைக்கப்பட்டிருந்த பூந்தமல்லி கிளை சிறைக்கு நேற்று இரவு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 23 பேர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இரவோடு இரவாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 23 பேர் புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், சிறைகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications