மாவட்ட எஸ்.பிக்கள் உட்பட 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. உள்துறை செயலர் தீரஜ் குமார் போட்ட உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 24 பேர் இன்று அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, நீலகிரி, தூத்துக்குடி, கோவை, பெரம்பலூர், கரூர், சேலம் நாகை, திருப்பத்தூர், விருதுநகர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, தருமபுரி, தென்காசி, வேலூர் ஆகிய 14 மாவட்ட எஸ்.பிக்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் இன்று பிறப்பித்துள்ள உத்தரவின் படி, தமிழக காவல்துறையில் பணியாற்றும் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 14 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்: நீலகிரி, தூத்துக்குடி, கோவை, பெரம்பலூர், கரூர், சேலம் நாகை, திருப்பத்தூர், விருதுநகர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, தருமபுரி, தென்காசி,வேலூர் ஆகிய மாவட்ட எஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றப் பட்டியலில், சக்தி கணேசன், சுஜித் குமார், செல்வநாகரத்தினம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்குகளை கண்காணிக்கும் பிரிவு துணை ஆணையர் எஸ்.சக்தி கணேசன் சென்னை காவல் நவீன கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் மதுரை தெற்கு மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்பி-யான சுஜித் குமார் சென்னை பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றபட்டுள்ளார். வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்பி-யான எஸ். செல்வநாகரத்தினம் திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் (2) என்.எஸ்.நிஷா நீலகிரி மாவட்ட எஸ்பி ஆகவும், ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி யான ஹரிகிரன் பிரசாத் சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராகவும், திருப்பத்தூர் எஸ்பி-யான ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி எஸ்பி-யாகவும், திருவண்ணாமலை எஸ்பி-யான கார்த்திகேயன் கோவை எஸ்பி-யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி கிழக்கு துணை ஆணையர் ஆதர்ஷ் பசேரா பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆகவும், தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பி-யான புக்யா சினேக பிரியா சென்னை அண்ணாநகர் துணை ஆணையராகவும், சென்னை பூக்கடை காவல் மாவட்ட துணை ஆணையர் ஸ்ரேயா குப்தா திருப்பத்தூர் எஸ்பி யாகவும், தாம்பரம் காவல் மாவட்ட பள்ளிக்கரணை துணை ஆணையர் கவுதம் கோயல் சேலம் எஸ்பி-யாகவும், அங்கிருந்த அருண் கபிலன் நாகப்பட்டினம் எஸ்பி-யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் எஸ்பி ஆக இருந்த பெரோஸ்கான் அப்துல்லா கரூர் எஸ்பி-யாகவும், நீலகிரி எஸ்பி-யான சுந்தரவடிவேல் சென்னை பூக்கடை துணை ஆணையராகவும், காவல் நவீனமயமாக்கல் உதவி ஐஜி-யான டி.கண்ணன் விருதுநகர் எஸ்பி-யாகவும், தாம்பரம் காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜி.சுப்புலட்சுமி கோயம்பேடு துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு (1) துணை ஆணையர் ஜி.ஸ்டாலின் மயிலாடுதுறை எஸ்பி-யாகவும், கரூர் எஸ்பி-யான கே.பிரபாகர் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி-யாகவும், சென்னை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் தர்மபுரி எஸ்பி-யாகவும், சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன் தென்காசி எஸ்பி-யாகவும், சேலம் தெற்கு துணை ஆணையர் என்.மதிவாணன் வேலூர் எஸ்பி-யாகவும், ஆவின் விஜிலென்ஸ் எஸ்பி மேகலினா ஐடென் சென்னை தலைமையிட துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் துணை ஆணையர் வி.வி.கீதாஞ்சலி, அதே பிரிவில் உள்ள மத்திய குற்றப்பிரவு (2) துணை ஆணையராகவும், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் டி.ரமேஷ் பாபு சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications