“ஃபுல் போதை”.. சென்னை மோடி கூட்டத்தில் பரபர! 18 வயசே ஆகல - பாஜகவோடு வந்தவர்கள் பெண்களிடம் அத்துமீறல்
சென்னை: பல்லாவரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட சாலை மற்றும் ரயில்வே போக்குவரத்து திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சிக்காக கடலூர் மாவட்டத்தில் இருந்து பாஜகவால் அழைத்து வரப்பட்டவர்கள் பெண்களிடம் அத்துமீறியதாக கூறி போலீசார் அவர்களை கைது செய்தனர். 3 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்லாவரம் காவல் நிலையத்தில் பாஜகவினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.
நேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தையும் அதை தொடர்ந்து சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து மெரினா கடற்கரை அருகே அமைந்து உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

சென்னையில் மோடி கூட்டம்: அதை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மாநில அமைச்சர்கள் எவ வேலு, அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் தாம்பரத்திலிருந்து புறப்படும் தாம்பரம் - செங்கோட்டை அதிவேக விரைவு ரயில் சேவை மற்றும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து புறப்படும் திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி டெமு ரயில் சேவை ஆகியவற்றையும் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை - நத்தம் சாலை, மதுரையில் தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் போன்றவற்றை தொடங்கி வைத்த மோடி, அதன் பின்னர் சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாஜக தொண்டர்களை அழைத்து வந்திருந்தது. இந்த நிலையில் விழாவில் கலந்துகொண்ட பெண்களிடம் கடலூர் மாவட்டத்தில் இருந்து பாஜகவால் அழைத்து வரப்பட்ட 3 பேர் அத்துமீறி கேலி, கிண்டல் செய்ததை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்து உள்ளனர். உடனே அவர்களை கைது செய்த போலீசார், பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து தகவலறிந்த பாஜகவினர் காவல் நிலையத்திற்கு சென்று முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
18 வயதுக்கும் குறைவு: இதனை தொடர்ந்து பல்லாவரம் காவல் நிலையம் சென்ற காவல்துறை துணை ஆணையர் அதிவீர பாண்டியனை பாஜகவினர் சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் பாஜகவினரை தாக்கியதாகவும், இதற்கு விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் ஆவேசமடைந்த துணை ஆணையர், அனைவரையும் காவல் நிலையத்தைவிட்டு வெளியேற்றிவிட்டு கைதான 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டார். அப்போது கைது செய்யப்பட்ட மூவருமே 18 வயதுக்கு குறைவானவர்கள் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications