போகியால் ஓடுதளமே தெரியாத அளவுக்கு புகை மூட்டம்! சென்னையில் இருந்து 30 விமானங்கள் தாமதமாக புறப்பாடு
சென்னை: சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் புறப்பட வேண்டிய விமானங்கள் பனி மூட்டம், போகி பண்டிகையின் புகைமூட்டம் காரணமாக தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓடுபாதையே தெரியாத அளவுக்கு புகை மூட்டம் நிலவி வருகிறது. மார்கழி மாதத்தில் பனிமூட்டம் இருக்கும். அதிலும் இன்று மார்கழியின் கடைசி நாள் என்பதால் பனி அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் போகி பண்டிகை என்பதால் இன்றைய தினம் பழைய பொருட்களை மக்கள் எரித்து வருவதால் சென்னையில் புகை மூட்டமும் அதிகமாக இருக்கிறது. எனவே பனி மூட்டம், புகை மூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன.
அதாவது சென்னையில் இருந்து துபாய், சிங்கப்பூர், அபுதாபி, கோலாலம்பூர், கோவா, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களின் நேரத்தில் மாற்றம் என பயணிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
அது போல் டெல்லி, பெங்களூரில் இருந்து அதிகாலை சென்னை வர வேண்டிய 3 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் ஓடுதளமே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications