ஆயுத பூஜை+தீபாவளி பண்டிகை.. 34 சிறப்பு ரயில்கள்.. சொந்த ஊர் போறவங்களுக்கு தெற்கு ரயில்வே குட் நியூஸ்
சென்னை: பண்டிகை நாட்களில் நாடு முழுவதும் 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார். இந்த நிலையில், ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைக்கு மட்டும் 34 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் பண்டிகை நாட்களில் பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். தமிழகத்தில் சென்னையில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான். இவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டாட செல்வார்கள்.

இதனால், இந்த பண்டிகை நாட்களில் ரயில்களிலும், பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். நடப்பு ஆண்டில் வரும் அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை அக்டோபர் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து சனிக்கிழமை விஜயதசமி, ஞாயிற்றுக்கிழமை பொதுவிடுமுறை என தொடர்ந்து மூன்று தினங்கள் வருகின்றன.
இதனால், தசரா திருவிழா கொண்டாட்டத்திற்காகவும் விடுமுறைக்காகவும் சொந்த ஊர்களுக்கு செல்ல பலரும் திட்டமிட்டுள்ளனர். ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் காலியாகி உள்ளன. அதேபோல தீபாவளி பண்டிகையை பற்றி சொல்லவே தேவையில்லை. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 120 நாட்கள் முன்பே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. இதனால், பண்டிகை நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
பண்டிகை நாட்களில் நாடு முழுவதும் 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார். இந்த நிலையில், ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு 34 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது:-
பண்டிகை காலத்தில் மக்கள் சொந்த ஊருக்கு சிரமம் இன்றி செல்லும் வகையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் மொத்தம் 34 சிறப்பு ரயில்கள் இயக்கபடும் இவற்றில், 28 சிறப்பு ரயில்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வெளியூருக்கு பயணிகள் அதிக அளவில் செல்வார்கள் என்பதால் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்கவேண்டும் என்பதும் பயணிகள் முன்வைக்கும் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications