அதிமுக எம்எல்ஏக்கள் 36 பேர் தவெகவுக்கு ஆதரவா? எதிர்பாரத ட்விஸ்ட்? உச்ச கட்ட பரபரப்பில் ரத்தத்தின் ரத்தங்கள்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கடும் தோல்வியை சந்தித்த நிலையில் அக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிவி சண்முகம் தலைமையில் 36 எம்.எல்.ஏக்கள் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. மேலும் இன்று இரவுக்குள் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் உச்சக்கட்ட பரபரப்பில் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் உள்ளனர்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கடும் தோல்வியை சந்தித்தது. கடந்த முறை எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது தக்க வைத்திருந்த அதிமுக இந்த முறை அதையும் இழந்துவிட்டது. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில் வெறும் 47 இடங்களை மட்டுமே பெற்று இருந்தது.

எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையில், அந்த கட்சி சந்தித்த அத்தனை தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் தோல்வி 11-வது தோல்வியாக மாறி இருக்கிறது. இது அந்த கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் தவெக-வுடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்புகள் இருந்தும், அதனை அதிமுக சரியாக பயன்படுத்தாமல் விட்டதே இந்த தோல்விக்கு முக்கிய காரணம் என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்து இருக்கிறது. இதனாலேயே தற்போது எடப்பாடிக்கு எதிராக அதிமுகவில் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றன.
அதிமுகவில் பிளவு?
அதிமுக மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் நேற்று தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் 36 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. சட்டசபை தோல்விக்கு பொறுப்பேற்று அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடியை நீக்கி விட்டு புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விரைவில் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, எஸ்.பி.வேலு மணி அதிமுக புதிய பொதுச்செயலாளராகவும் சி.வி. சண்முகம் அதிமுக சட்டமன்ற குழு தலைவராகவும் தேர்வாக வாய்ப்பு இருப்பதாக அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார். மேலும் விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
36 எம்.எல்.ஏக்கள் விஜய்க்கு ஆதரவு?
எடப்பாடி தலைமையில் ஒருபுறம் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கும் அதே சூழலில், சிவி சண்முகம் தலைமையிலும் 36 எம்.எல்.ஏக்களுடன் தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. கடந்த 3 நாட்களாக இப்படி தனித்தனியாக கூட்டம் நடந்து வருகிறது. சிவி சண்முகம் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 36 பேர் விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் பிளவு ஏற்பட்டதாக விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே இந்த கூட்டம் நடந்திருப்பதும் தெரியவந்து இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். மேலும் இன்று இரவுக்குள் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கூறப்படுகிறது.
இன்று இரவே வெளியாகிறதா?
அதாவது விஜய்க்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில் விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் தவெகவுடன் கூட்டணி வைக்காமல் ஆட்சி அமைக்க மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளதாலும், விஜய்க்கு 13ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாலும், அதிமுக இந்த சான்சை பயன்படுத்தி விஜய்க்கு ஆதரவு அளிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.














Click it and Unblock the Notifications