தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்கக் கோரி... 79 நாட்களாக 4,000 கி.மீ சைக்கிள் பயணம்!
சென்னை: தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்கக்கோரி பனையேறிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 4,000 கிலோமீட்டர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் சென்றுள்ளனர்.
கடந்த 79 நாட்களாக தமிழகத்தின் மூலை முடுக்குகள் எல்லாம் சைக்கிளிலேயே சுற்றிவந்த அவர்கள் இறுதியாக தலைநகர் சென்னையை அடைந்துள்ளனர்.
கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பனைத் தொழில் தொடர்புடைய 30 லட்சம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

பனைத் தொழிலாளர்கள்
பனை மரங்களை நம்பி வாழும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு அது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், பனைப் பொருட்களை மதிப்புக்கூட்டுவதற்கான நவீன இயந்திரங்களை விநியோகம் செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பனை ஏறும் விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்தில் கருவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கள்ளுக்கு தடை
இந்நிலையில் கள்ளுக்கான தடையையும் தமிழகத்தில் நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பனை ஏறுவோர் மட்டுமல்லாமல் பனைத் தொழில் சார்ந்து வாழும் சுமார் 30 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்கக் கோரி அந்த சங்கத்தை சேர்ந்தோர் கடந்த 79 நாட்களாக 4,000 கிமீ விழிப்புணர்வு சைக்கிள் பயணம் செய்துள்ளனர்.

சைக்கிள் பயணம்
இறுதியாக சைக்கிள் பயணத்தை நிறைவு செய்யும் விதமாக சென்னையை அடைந்துள்ள அந்தச் சங்கத்தினர், இது தொடர்பான தங்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றனர். இதனிடையே தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணனை சந்தித்து மனு அளிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் நடைபெற்றிருக்கிறது.

அரசு நிதி ஒதுக்கீடு
நடப்பு 2022-23 ஆம் ஆண்டில் மட்டும், பனை சார்ந்த தொழில்களின் மேம்பாடுக்காக தமிழக அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கத்தினருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications