கொரோனா மருந்து விவகாரம்: சித்த வைத்தியர் தணிகாசலத்தின் போலீஸ் காவல் 4 நாட்களாக குறைப்பு
சென்னை: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக தகவல் பரப்பிய சித்த வைத்தியர் தணிகாசத்தின் 6 நாள் போலீஸ் காவலை 4 நாட்களாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், தான் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், முதல்வர் பழனிசாமி அனுப்பிய நோயாளிகளில் 2 பேரை குணப்படுத்தியதாகவும் கூறிவந்தார் சித்த மருத்துவர் தணிகாசலம். ஆனால் முதல்வர் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றை குறித்த தவறான தகவலை சமூக ஊடகங்களில் பரப்பியதாக திருதணிகாசலத்துக்கு எதிராக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் புகார் அளித்தார்.

இதனடிப்படையில் சென்னை மத்திய குற்றப் பிரிவுவின் சைபர் கிரைம் போலீஸார் மே 6ஆம் தேதி தகவல் தொழில்நுட்ப சட்டத்திலும், அரசுக்கு எதிராக தகவல் வெளியிட்டது மற்றும் நோய்த்தொற்று தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்தனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவரை மே 20 வரை நீதிமன்ற காவலில் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஜாமீன் கோரிய தணிகாசலத்தின் மனு மற்றும் 7 நாள் போலீஸ் காவல் கோரிய மத்திய குற்றப்பிரிவு மனுக்களை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தணிகாசலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை நீதிபதி என்.சதீஷ்குமார் இன்று விசாரித்தார். அப்போது, தணிகாசலம் கைதால் எந்த பதற்றமான சூழலோ, சமூகத்தில் தாக்கமோ ஏற்படாதபோது அவரை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியமற்றது என்றும், முறையாக நோட்டீஸ் அனுப்பாமல் கைது செய்துள்ளதாக வாதிடப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் போலீஸ் காவலை ரத்து செய்யக்கூடாது என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சதீஷ்குமார், 6 நாள் காவல் என்ற எழும்பூர் நீதிமன்ற உத்தரவை 4 நாட்களாக குறைத்து உத்தரவிட்டார். மேலும் போலீஸ் காவல் முடிந்து மே 16ல் ஆஜர்படுத்தும்போதே, அவரது ஜாமீன் மனுவை விசாரித்து தகுதியின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென எழும்பூர் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications