"குளுகுளு மழை.!" கொளுத்தும் வெயிலுக்கு நடுவே அடுத்த 3 மணி நேரத்திற்கு.. எங்கெல்லாம் தெரியுமா
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கோடைக் காலத்திற்கு இணையாக வெயில் கொளுத்தி வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மற்ற எல்லா இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் மழை ரொம்பவே மோசமாக இருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தமிழ்நாட்டில் மட்டும் அதற்கு நேர்மாறான ஒரு வானிலையே நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகமாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
எங்கு மழை: தனியார் வானிலை ஆய்வாளர்கள் இதை இரண்டாவது சம்மர் எனக் குறிப்பிடுகிறார்கள். பொதுவாகத் தமிழ்நாட்டில் கணிசமான இடங்களில் ஜூலை,. ஆகஸ்ட் மாதங்களில் மழை பெய்யும். நாட்டின் பிற பகுதிகளில் பருவமழை ஆரம்பித்துவிட்ட போதிலும், தமிழ்நாட்டில் இன்னும் பருவமழை காரணமாக மழை பெரிதாகப் பெய்யவில்லை.. மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் வெயில் அதிகமாகவே இருக்கிறது. தினசரி 10+ மாவட்டங்களில் வெப்பம் அசால்டாக 100 டிகிரி பாரன்ஹீட்டை வெப்பம் தாண்டுகிறது.
வெப்பம் ரொம்பவே ஓவராக இருப்பதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வெயிலுக்குக் குட்டியாக பிரேக் விடும் வகையில் தமிழ்நாட்டில் மொத்தம் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிளைமேட் எப்படி: முன்னதாக சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் ஆகஸ்ட் 9 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை வானிலை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications