4ஆம் தேதிக்கு அப்புறம் வர்றோம்.. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 4 பேர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை!
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேர் இன்று சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு ஆஜராவதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. நாளை 7ஆம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் முடிவடைந்தது. தேர்தலுக்கு முன்பாக சென்னையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது ரூ.4 கோடி பணம் சிக்கியது.
சிக்கிய ரூபாய் 4 கோடி பணம் பாஜகவின் திருநெல்வேலி மக்களவை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவுக்கு சொந்தமானது என புகார் எழுந்தது. காரணம், அந்த பணத்தை கொண்டு சென்று கைதானவர்கள் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமாக புரசைவாக்கத்தில் உள்ள ஹோட்டலில் பணியாற்றுபவர்கள்.
இதுகுறித்து தாம்பரம் போலீசார் பதிவு செய்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சென்னை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை பாஜக பிரமுகர் கோவர்தன் உள்பட 15க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 4 கோடி பறிமுதல் தொடர்பாக பல இடங்களில் போலீசார் சோதனையும் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், பாஜக முக்கிய நிர்வாகிகளுக்கும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், 4 கோடி ரூபாய் பறிமுதல் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக தொழில் பிரிவு தலைவர் கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய 4 பேர் இன்று சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பினர்.
4 கோடி ரூபாய் பறிமுதல் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முன் இன்று நயினார் நாகேந்திரன் ஆஜராகவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு ஆஜராவதாக நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நால்வரும் சிபிசிஐடி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதற்குப் பிறகு இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதாக நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சிக்கிய 4 கோடி பணத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications