குண்டு மேல குண்டு! திமுக-வை அலறவிடும் காங்கிரஸின் 40 சீட் டிமாண்டு.. ராகுல் காந்தி வந்தால் என்னாகுமோ
சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் நெருங்கி வரும் நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான உறவு ஒருவிதமான இழுபறி நிலையிலேயே நீடித்து வருகிறது... இன்னும் கூட்டணி இறுதி செய்யப்படவில்லை.. இப்படிப்பட்ட சூழலில் ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன..!
நாடாளுமன்ற தேர்தலின்போது உருவான இந்தியா கூட்டணியே இப்போதும் தொடர்வதாக திமுக, காங்கிரஸ் இரு தரப்பு தலைமைகளும் சொல்லிவிட்டாலும், தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு என்று வரும்போது 2 கட்சிகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பது வெளிப்படையாகவே தெரிந்து வருகிறது..

குறிப்பாக, இந்த முறை வெறும் வேட்பாளர்களாக மட்டும் இல்லாமல், ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்ற காங்கிரஸின் பிடிவாதம் திமுகவை யோசிக்க வைத்துள்ளது.
திமுக - காங்கிரஸ்
இதைத்தவிர, திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே ஏற்பட்டுள்ள நேரடி மோதல் கூட்டணியின் விரிசலை அதிகப்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ கோ. தளபதி பேசிய பேச்சு, எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல ஆகிவிட்டது.
மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்ற காங்கிரஸ் முக்கிய தலைவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரக்கூடாது, திமுகவின் உழைப்பால்தான் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்று அவர் விமர்சித்திருந்தது, காங்கிரஸ் தரப்பை கொதிப்படைய செய்துவிட்டது..
இதற்குப் பதிலடி கொடுத்த மாணிக்கம் தாகூர், இனி அமைதியாக இருக்க முடியாது, கோ. தளபதி போட்டியிடும் மதுரை வடக்கு தொகுதியிலேயே காங்கிரஸ் போட்டியிட உரிமை கோருவோம் என்றும் சவால் விடுத்துள்ளார்.
இதேபோல் கரூர் ஜோதிமணியும் தனது அதிருப்தியை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதுள்ள மரியாதையாலும், கூட்டணி தர்மத்திற்காகவும் மட்டுமே தாங்கள் பொறுமை காப்பதாகக் கூறியுள்ள அவர், தங்களை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என எச்சரித்துள்ளார்.
ராகுல் ஆல்ரெடி வார்னிங்
பொதுவெளியில் கூட்டணி குறித்துப் பேச வேண்டாம் என்று ராகுல் காந்தி ஏற்கனவே அறிவுறுத்தியும்கூட, அடிமட்ட தொண்டர்கள் மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மத்தியில் நிலவும் இந்த மோதல் தலைமைக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தரப்பிலிருந்து ஏன் இவ்வளவு தாமதம் என தெரியவில்லை.. திமுகவின் பதிலுக்கு 2 மாதங்களாக காத்திருக்கிறோம், இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.. என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், கூட்டணி பந்தை திமுக பக்கம் திருப்பி விட்டுள்ளதும் இங்கு கவனம் பெற்றுள்ளது..
இப்படிப்பட்ட ஒரு பதற்றமான சூழலில்தான் ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். காங்கிரஸ் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் வகையில், கிராம கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டை நடத்த மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். இதற்காக ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..
கூட்டணி பேச்சுவார்த்தை
தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ள கிராம கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டில் அவர் பங்கேற்கும்போது, இந்தத் தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவின் பிடிவாதமும், காங்கிரஸின் தன்மானப் போராட்டமும் மோதுகின்ற இந்தச் சூழலில், ராகுல் காந்தியின் வருகை கூட்டணியை பலப்படுத்துமா அல்லது புதிய அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்பதுதான் இப்போதைய தமிழக அரசியலின் ஹாட் டாபிக்காக உள்ளது..பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications