சென்னையில் இன்று 41 மின்சார ரயில்கள் ரத்து! எந்தெந்த ரூட்? மீண்டும் எப்போது இயக்கும்? முழு விவரம்
சென்னை: சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றும் 41 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இதில் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு புறநகர் ரயில்களுக்கும் பங்கு இருக்கிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1930ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. இந்த ரயில்கள் 4 பிரதானமான வழித்தடங்களில் 6 இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில் சேவை மிக முக்கியமானதாகும்.
இப்படி இருக்கையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை 10 மணி முதல் மதியம் 3.30 வரை திடீரென இந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. எப்போதும் இந்த புறநகர் ரயில் சேவையில் மாற்றம் இருப்பின் முன்னரே அறிவிக்கப்படும். ஆனால் நேற்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென 22 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இது பயணிகளை பெரும் எரிச்சலடைய வைத்தது. இதனையடுத்து இன்றும் 41 மின்சார ரயில்கள் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில் சேவைகள் திங்கள்கிழமை ரத்து செய்யப்படுகிறது" என்று கூறியுள்ளது. மேலும், பயணிகள் வசதிக்காக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நண்பகல் 11.55, 12.45 பிற்பகல் 1.25, 1.45, 1.55, 2.40,3.10 ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமார்க்கமாக காலை 9.30, 10.55, 11.30 நண்பகல் 12.00, 1.00 ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications