சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி... இன்று முதல் 70 நாட்கள் நடக்கிறது
சென்னை: சென்னை தீவுத்திடலில் இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
45-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
முதல்வர் பழனிசாமி பொருட்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: 28 மாநில அரசு துறைகள், 16 மாநில பொதுத்துறை நிறுவனங்கள், 2 மத்திய அரசு நிறுவனங்கள், 4 பிறமாநில அரசு நிறுவனங்கள் மற்றும் 60 தனியார் அரங்குகள் இந்த பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
சிறப்பு அம்சங்கள்
பொருட்காட்சியில் துபாயில் கட்டப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தின் மாதிரி வடிவம், கடல்வாழ் மீன் அருங்காட்சியகம், மேக கூட்டங்களை பிரதிபலிக்கும் மாதிரி ஆகிய சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழகம் முதலிடம்
2014 - 2017-ம் ஆண்டுகளில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சிறப்பான வளர்ச்சி பணிகளுக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.
கற்பனை குற்றச்சாட்டு
இந்த சாதனைகளுக்காக அரசை பாராட்டாமல், ஒருசிலர் இந்த அரசைப் பற்றி வேண்டுமென்றே ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை மக்களிடத்திலே பரப்பி வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் கூறும் கற்பனை குற்றச்சாட்டுகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
70 நாட்கள் நடைபெறும்
இந்த பொருட்காட்சி இன்று (வியாழக்கிழமை) முதல் 70 நாட்கள் நடைபெறும். பெரியவர்களுக்கு ரூ.35, சிறியவர்களுக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படும். தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி திறந்திருக்கும். விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.