Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4-வது முறையாக தமிழ்நாடு சட்டசபையில் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் நிறைவேறியது- இதுவரை நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் 4-வது முறையாக இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க கோரி இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மத்திய அரசால் தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சத்தீவு 1974-ம் ஆண்டு தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது; இதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இன்று சட்டசபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண, கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு. இதனை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டசபையில் 4-வது முறையாக கச்சத்தீவு மீட்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. கருணாநிதி முதல்வராக இருந்த ஒரு முறையும்,, ஜெயலலிதா முதல்வராக இருந்த இரு முறையும் கச்சத்தீவு மீட்பு தீர்மானங்கள், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. தற்போது 4-வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனிநபர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Kachchatheevu tamilnadu stalin dmk

கச்சத்தீவு விவகாரம்.. இதுவரை நடந்தது என்ன?

  • கிபி 1605-ல் மதுரையை ஆண்ட நாயக்கப் பேரரசால் இராமநாதபுரம் சேதுபதி என்கிற அரசு மரபு உருவாக்கப்பட்டது. அப்போது முதல் சேதுபதி மன்னர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தவை குருசடி தீவு, கச்சத்தீவு உட்பட மொத்தம் 69 கடற்கரை கிராமங்கள்.
  • கிபி 1803-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்ட போது, ராணி மங்களேசுவரி நாச்சியார் ஜமீன்தாரியாக இருந்தார். அவரது ஆட்சிக் காலத்திலும் கச்சத்தீவு, ராமநாதபுரம் ஜமீனுக்கு உட்பட்ட தீவுதான்.
  • கிபி 1899-ம் ஆண்டு ஏஜெ ஸ்டூவர்ட் வெளியிட்ட திருநெல்வேலி மாவட்ட மேனுவல் புத்தகத்தில் கச்சத்தீவு சர்வே எண் 1250. இத்தீவை ராமநாதபுரம் மன்னர், தனிநபர்களுக்கு குத்தகைக்கு விட்டுள்ளார் என பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • 1915, 1929, ஆண்டுகளின் இராமநாதபுரம் மாவட்ட அரசு புள்ளி விவரங்களில் கச்சத்தீவு நிலம் பற்றிய விவரக் குறிப்புகள் உள்ளன.
  • 1920-ம் ஆண்டுகளிலேயே கச்சத்தீவு தொடர்பான சர்ச்சை எழுந்தது. 1921-ம் ஆண்டு அக்டோபர் 24-ல் இலங்கையின் கொழும்பு நகரில் சென்னை மாகாண அதிகாரிகள் மற்றும் இலங்கை அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது; ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை.
  • 1936 முதல் 1940-ம் ஆண்டு வரை இலங்கையில் அமைச்சரவை செயலாளராக இருந்த பிபி பிரீஸ், இங்கிலாந்து விக்டோரியா மகாராணியாரின் பிரகடனத்தின் அடிப்படையில் கச்சத்தீவு ராமநாதபுரம் ஜமீனுக்குதான் சொந்தம் என அரசு பதிவேடுகளில் பதிவு செய்தார்.
  • 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திர நாடாக விடுதலை பெற்ற பின்னரும் ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே கச்சத்தீவு இருந்து வந்தது.
  • 1949-ம் ஆண்டு பாக் நீரிணை பகுதியில் இந்திய கடற்படை பயிற்சி மேற்கொள்ள முனைந்தது. கச்சத்தீவு பகுதியை குண்டு வீச்சு தள பயிற்சிக்குரிய இடமாகவும் தேர்வு செய்தது. ஆனால் இலங்கையின் கடும் எதிர்ப்பால் இது நடைபெறவில்லை.
  • 1956-ம் ஆண்டும் இதே போல இந்திய விமானப் படை பயிற்சி மேற்கொள்ளும் தளமாக கச்சத்தீவை பயன்படுத்துவோம் என இலங்கையிடம் தெரிவித்தது; ஆனால் இலங்கையோ, தங்களது நாட்டின் ஒரு பகுதி என பிடிவாதம் பிடித்தது.
  • 1973-ம் ஆண்டு இந்திரா காந்தி அம்மையார், இலங்கைக்கு சென்றார். அப்போது கச்சத்தீவு உரிமை குறித்து விவாதிக்கப்பட்டது.
  • 28.06.1974-ல் பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் இலங்கை அதிபர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் கச்சத்தீவு முதலாவது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • 29.06.1974-ல் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து புதியதாக தொடங்கி இருந்த அண்ணா திமுக, வெளிநடப்பு செய்தது.
  • மேலும் கச்சத்தீவு, தமிழ்நாட்டின் ராமநாதபுரம் ஜமீனுக்குதான் சொந்தமானது என்கிற ஆவணங்களைத் திரட்ட பேராசிரியர் எஸ்.கிருஷ்ணசாமியை தமிழ்நாடு முதல்வராக இருந்த கருணாநிதி நியமித்தார்.
  • கச்சத்தீவு தமிழ்நாட்டுக்குதான் சொந்தம் என்பதற்கான ஆதாரங்களுடன் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை, முதல்வராக இருந்த கருணாநிதி நேரில் சந்தித்து, கச்சத்தீவை தாரைவார்க்க எதிர்ப்பு தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அப்போதைய தமிழ்நாடு சட்ட அமைச்சர் செ.மாதவன் உடனிருந்தார்.
  • 21.08.1974-ல் தமிழ்நாடு சட்டசபையில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததைக ்கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், இந்தியாவுக்குச் சொந்தமானதும் தமிழ் நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இந்தப் பேரவை ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கையுடன் ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • 23.03.1976-ல் கச்சத்தீவு தொடர்பாக 2-வது ஒப்பந்தம் கையெழுத்தானது; 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு கச்சத்தீவு பகுதியில் வழங்கப்பட்டிருந்த பாரம்பரிய மீன்பிடி உரிமை இந்த ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை.
  • 1980களில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்தது. அப்போது முதல், தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள கச்சத்தீவு பகுதிக்கு சென்றாலே, போராளிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என தாக்குதல் நடத்தி சுட்டுப் படுகொலை செய்வதை வழக்கமாக வைத்துள்ளது இலங்கை கடற்படை. இதுவரை 800-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
  • 1991-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, சுதந்திர தின விழாவில் பேசுகையில் "கச்சத்தீவினை மீட்போம்" என்று பிரகடனம் செய்தார்.
  • 03.10.1991 அன்று தமிழ்நாடு சட்டசபையில் முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது, கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
  • 23-07-2003-ல் பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு, தமிழ்நாடு முதல்வராக இருந்த எழுதிய கடிதம் ஒன்றில், இந்தியா- இலங்கை நாடுகளுக்கிடையே நல்லுறவு- பேணப்பட வேண்டும்; கச்சத்தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம் என குறிப்பிட்டிருந்தது சர்ச்சையானது
  • அதாவது "Lease in Perpetuity", அதாவது நிரந்தரமான குத்தகை என்ற முறையிலாவது கச்சத் தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மத்திய அரசு பெற்று தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்பது அப்போது ஜெயலலிதாவின் நிலைப்பாடாக இருந்தது.
  • 2008-ம் ஆண்டு தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, உச்சநீதிமன்றத்தில் கச்சத்தீவை மீட்க கோரி வழக்கு தொடர்ந்தார். அதில், கச்சத்தீவு தொடர்பான 1974, 1976 ஒப்பந்தங்களை ரத்து செய்து, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த நிலையில் 2017-ம் ஆண்டு இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தரப்பு மட்டும் முடித்து வைக்கப்பட்டது. ஆனால் அதிமுகவின் அமைப்புச் செயலாளரை இந்த வழக்கில் மனுதாரராக சேர்க்க உச்சநீதிமன்றத்தை நாடியிருப்பதாக கடந்த ஆண்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
  • 2011-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா தாக்கல் செய்த வழக்கில் தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனடிப்படையில் தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையும் கச்சத்தீவு வழக்கில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
  • 03.5.2013 அன்று தமிழ்நாடு சட்டசபையில், இந்தியாவுக்கு சொந்தமான கச்சத் தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை 1974 ஆம் ஆண்டைய இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டதை திரும்பப் பெற விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • 15.4.2013 அன்று திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற டெசோ அமைப்பின் கூட்டத்தில், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதைப் பிரகடனப்படுத்த டெசோ அமைப்பின் மூலம் உச்சநீதிமன்றத்தை அணுகுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • 2013-ம் ஆண்டு கச்சத்தீவை மீட்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சார்பிலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. கருணாநிதி மறைந்த நிலையிலும் கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, திமுகவின் பொருளாளர் டிஆர் பாலு, இவ்வழக்கில் கருணாநிதிக்கு பதிலாக மனுதாரராக சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
  • 02.04.2025-ல் தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த கச்சத்தீவு மீட்பு தீர்மானம் நிறைவேற்றபட்டது. இந்த தீர்மானத்துக்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட சட்டசபையில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+