வீடியோவுக்கு 5 ஆயிரம்? உள்ளே போக ரூ.100.. Zip line 250: ஷாக் அடிக்கும் கலைஞர் பூங்கா!
சென்னை: புதியதாகத் திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் சாமானிய மக்களால் தாங்க முடியாத அளவுக்கு உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சென்னை நகரம் பலவிதங்களில் மிக வேகமாக வளர்ந்து இருக்கிறது. ஆனால், மன அமைதிக்காக எங்காவது போய் வரலாம் என்று யோசித்தால், அப்படிப் போய் பார்ப்பதற்கு என்று பொழுதுபோக்கு இடங்கள் மிகமிக குறைவு. மெரினாவை விட்டால் வேறு வழி இல்லை. செம்மொழி பூங்கா இருக்கிறது. அங்கேயும் அதிக நேரம் உட்கார்ந்து இருக்க முடியாது. அங்கே பொழுதுபோக்குவதற்கான வசதிகள் குறைவு. குழந்தைகளை அழைத்துச் சென்றால், அவர்கள் அங்கே உள்ள பொதுப்போக்கு விசயங்களில் ஈடுபாடு கொண்டு மகிழ வேண்டும். அப்படி எல்லாம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஒரு இடம் கூட இல்லை.

அதை மனதில் வைத்துத்தான் இந்த அரசு பல இடங்களில் பூங்காவை உருவாக்கி வருகிறது. அவை கூட சாதாரண அளவில் உள்ளவைதான். சர்வதேச தரத்தில் ஒரு பூங்கா அல்லது பொழுதுபோக்கு இடம் இல்லை. அந்தக்குறையைக் கொஞ்சம் குறைத்துள்ளது கலைஞர் நூற்றாண்டு பூங்கா. இத்தனை ஆண்டுகள் தனிநபர் ஒருவர் அபகரித்து வைத்திருந்த நிலத்தை மீட்டு, அங்கே ஒரு பூங்காவை அமைத்துள்ளனர்.
சென்னை கதீட்ரல் சாலையில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான 6.09 ஏக்கர் நிலத்தில் ரூ. 46 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார். அப்போது அங்கே அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வாழ் பறவைகள் பூங்காவிலிருந்த வண்ணக் கிளிகளைக் கையில் ஏந்தியபடி அவர் மகிழ்ச்சியில் மூழ்கினார்.
இது சிங்கப்பூரில் உள்ள பூங்காவை மாதிரியாகக் கொண்டு சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவுக் கட்டணமாகச் சிறுவர் எனில் 50 ரூபாயும் பெரியவர் எனில் 100 ரூபாயும் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கே புதியதாக Zip line அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இதில் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பியின் வழியே அமைக்கப்பட்டுள்ள கூடையில் அமர்ந்து பயணிக்கலாம். பழனி மலைப்பாதையில் உள்ளதைப்போன்று உள்ளது. இதற்கான கட்டணமாகச் சிறுவருக்கு 200ரூபாயும் பெரியவருக்கு 250ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

தனி இருக்கையில் அமராமல் பெற்றோரின் மடியில் உட்கார்ந்தபடி குழந்தைகள் பயணிப்பதாக இருந்தால் ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல் உள்ளே அமைக்கப்பட்டுள்ள அயல்நாட்டு பறவையகத்தை பார்க்கச் சிறுவர்களுக்கு 75 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே பெரியவர்கள் என்றால் இரண்டு மடங்கு கூடுதல் கட்டணமாக 150 வசூல் செய்யப்படுகிறது.
பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தல், குட்டி ரயில் பயணம், வண்ணமயமான இசை நீரூற்று என பல விசயங்கள் மனதைக் கவர்கின்றன. இந்த வண்ணமயமான பூங்காவை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றால் கட்டணம் எவ்வளவுத் தெரியுமா? 5 ஆயிரம் ரூபாய். ஆத்தாடி? என இப்போதே வாயைப் பிளக்கிறீர்களா? அதான் கொடுமை.
உள்ள செல்வதற்கு 100 ரூபாய் கட்டணம் கட்டிய பிறகு, அதைத்தாண்டி ஒவ்வொன்றையும் பார்க்க தனித்தனி கட்டணம் எனப் போட்டிருப்பது பொதுமக்களைக் கொஞ்சமும் மனதில் வைத்து கட்டணத்தை நிர்ணயிக்காமல் சகட்டு மேனிக்கு ரூபாயைப் பிடுங்கும்படி உள்ளது என முதல் நாள் அன்று வந்த பார்வையாளர்களே கவலையைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
அதாவது உள்ளே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நுழைந்தால் கிட்டத்தட்ட 1500 ரூபாய் தேவை. இதுகூட ஒரு தோராய கணக்குதான். அதனுடன் வீடியோ செலவைச் சேர்த்தால் 6500 ரூபாய் தேவை. இது பொழுது போக்கு பூங்காவா? அல்லது சீட்டாட்டம் நடக்கும் கிளப்பா? என்று பலரும் பயந்து நடுங்குகிறார்கள். இந்தக் கட்டணமே அதிகம் என்கிறார்கள்.
அதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் 100 ரூபாய் போட்டு வாங்கும் நுழைவுக் கட்டணம் 3 மணிநேரம் வரைதான் செல்லுபடியாகுமாம். இதை உணர்ந்துதான் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்; அப்போதுதான் பூங்கா உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். இல்லாவிட்டால் இது பணக்காரர்களுக்கான பூங்காவாகவே பார்க்கப்படும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ஆயிரம் விளக்குப் பகுதியில் இந்தப் பூங்காவைக் காண வந்த கல்லூரி மாணவி மதுமிதா, "இப்போது பார்க்கச் சுத்தமாக உள்ளது. அதைக் கடைசிவரை இதே மாதிரி அரசு காப்பாற்ற வேண்டும்" என்கிறார். குடும்பத் தலைவி சரஸ்வதி கூறும்போது, "மெரினா கூட இப்போது நன்றாக இல்லை. குடும்பத்துடன் அங்கே போய் மன அமைதியாக உட்கார்ந்து ரசிக்க முடியவில்லை. இந்த இடம் எங்கள் குடியிருப்பு பக்கத்திலேயே வந்துள்ளது மகிழ்ச்சி. இங்கே உள்ள வெளிநாட்டுப் பறவைகள் மற்றும் கண்ணாடி மாளிகை சிறப்பாக இருக்கிறது" என்கிறார்.












Click it and Unblock the Notifications