மின்வாரியம் அமைதியாக செய்த 'அதிர்ச்சி' சாதனை.. ஒரே மாதம் 5.48 கோடி யூனிட்! அடுத்தது என்ன?
சென்னை: தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையை தடையின்றி பூர்த்தி செய்யவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் மின் உற்பத்தியை பெருக்கவும் தமிழக அரசு இப்போது ஒரு பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்துள்ளது. அதாவது 2030ம் ஆண்டுக்குள் சூரிய சக்தி (Solar Energy) மூலம் சுமார் 20,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) அதிரடி திட்டத்தை தீட்டியுள்ளதாம்.. இந்த சர்ப்ரைஸ் செய்திதான் பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, இப்போதைய சராசரி மின்சாரத் தேவை என்பது சுமார் 19,000 மெகாவாட்டாக உள்ளது. ஆனால் கோடைக்காலத்தின் கோரத்தாண்டவம், உச்சத்துக்கு எகிறி வரும் தொழிற்சாலைகளின் பெருக்கம் காரணமாக, அடுத்த மாதங்களில் இந்த தேவை 20,000 முதல் 22,000 மெகாவாட் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ரூ. 70,000 கோடி முதலீட்டில் மெகா பிளான்
தற்போது அனல் மின் நிலையங்கள், புனல் மின் நிலையங்கள், நீர் மற்றும் எரிவாயு நிலையங்கள் மூலம் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. இருந்தாலும் உச்சக்கட்ட தேவையைப் பூர்த்தி செய்யத் தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டிய சூழல் நிலவுகிறது.
எனவேதான், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழக அரசு 70,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது.
சூரிய மின்சக்தி மாவட்டங்கள்
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களையும் 'சூரிய மின்சக்தி மாவட்டங்களாக' மாற்றும் முயற்சியில் மின்சார வாரியம் இறங்கியுள்ளது. நிலக்கரியை சார்ந்து இயங்கும் மின் நிலையங்களின் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை வளமான சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரத்தை முதன்மைப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
கடந்த மாதத்தில் மட்டும் தமிழகத்தின் சூரிய மின்சார உற்பத்தி 5.48 கோடி யூனிட்டுகளை தொட்டு ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. வெயில் காலம் தீவிரமடைந்து வருவதால், வீடுகளில் மின்சார நுகர்வு அதிகரித்துள்ள போதிலும், சூரிய மின்சக்தி உற்பத்தி கைகொடுப்பதால் தட்டுப்பாடின்றி மின் விநியோகம் செய்ய முடிகிறது.
சக்ஸஸ் மின் உற்பத்தி
சூரிய மின்சாரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டாலும், அவற்றை Grid எனப்படும் மின்சாரக் கட்டமைப்பில் இணைப்பதில் சில டெக்னிக்கல் பிரச்சனைகள் உள்ளதாம்.. போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் சில நேரங்களில் உற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டிய சூழலும் ஏற்படுவதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். இப்படி எத்தனை சிக்கல்கள் வந்தாலும்கூட, 2030ம் ஆண்டிற்கான இலக்கை அடையத் தேவையான கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, வருங்காலத் தலைமுறைக்குத் தடையற்ற மின்சாரத்தை வழங்கத் தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த 20,000 மெகாவாட் திட்டம், மாநிலத்தின் எரிசக்தித் துறையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என்றே தெரிகிறது.. அதுமட்டுமல்ல வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டமும் சூரிய சக்தியில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது...!!












Click it and Unblock the Notifications