சீறிய 5 சரவெடிகள்.. அமைச்சரவை மாற்றத்தில் ஸ்மார்ட்டாக செயல்பட்ட ஸ்டாலின்.. எல்லா போகஸும் "அங்கேதான்"
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மற்றும் இலாக்கா மாற்றத்திற்கு பின்பாக பல்வேறு காரணங்கள் இருப்பதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஸ்டாலின் முறையாக திட்டமிட்டு இந்த மாற்றங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று, ஒன்றரை வருடத்திற்கு பின் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனது மட்டுமின்றி பல சீனியர் அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டு உள்ளன. ஐ பெரியசாமி, ராஜகண்ணப்பன், முத்துசாமி, பெரியகருப்பன், சேகர் பாபு, ராமசந்திரன், காந்தி, பிடிஆர், மெய்யநாதன், மதிவேந்தன் ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றப்பட்டு உள்ளன.
கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யாநாதன், சுற்றுசூழல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு அமலாக்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ரிப்போர்ட்படி நடவடிக்கை
இந்த அமைச்சரவை மாற்றம் முழுக்க முழுக்க ரிப்போர்ட் அடிப்படையில் செய்யப்பட்டு உள்ளது. அதாவது அமைச்சரவையை மாற்ற இரண்டு விதமான ரிப்போர்ட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு ரிப்போர்ட் அமைச்சர்கள் தங்கள் துறையை பற்றி கொடுக்கும் ரிப்போர்ட். தங்களுக்கு கீழ் உள்ள இலக்காக்களில் அமைச்சர்கள் எடுக்கும் முடிவுகள், செயல்பாடுகள் பற்றி அமைச்சர்களே கொடுக்கும் ரிப்போர்ட். இதை அவ்வப்போது அமைச்சர்கள் கொடுப்பார்கள். இரண்டாவது ரிப்போர்ட் அமைச்சர்கள் பற்றி உளவுத்துறை கொடுக்கும் மாதாந்திர ரிப்போர்ட். அமைச்சர்களின் செயல்பாடு பற்றி உளவுத்துறை கொடுக்கும் மார்க். இதை எல்லாம் அடிப்படையாக வைத்து, அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதில் ஸ்டாலினின் 5 முக்கியமான நடவடிக்கைகள் பின்வருமாறு..

சீனியர்களுக்கு கூடுதல் பொறுப்பு
கட்சியில் சீனியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர் சேகர் பாபுவிடம் கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இப்படி கட்சியின் முக்கியமான அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

சர்ச்சை அமைச்சர்
முன்னதாக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் சரியாக செயல்படவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டன. அதேபோல் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனும் சரியாக செயல்படவில்லை. தமிழ்நாட்டில் சுற்றுலாவை அதிகரிக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில்தான் வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

டாப் இலாக்காவில் மாற்றமில்லை
அதே சமயம் டாப் இலாக்கா எதிலும் மாற்றம் செய்யப்படவில்லை. அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, அன்பில் மகேஷ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, ஏவ வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், ரகுபதி, செந்தில் பாலாஜி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகிய 11 அமைச்சர்களின் பதவிகளில் எந்த மாற்றமும் இல்லை. அவர்களின் துறைகள் மாற்றப்படவில்லை. இது போன்ற டாப் இலாக்காக்களை மாற்றுவது பொதுவாக பெரிய அளவில் சர்ச்சையாகும். அந்த அமைச்சர் சரியாக செயல்படவில்லையா என்ற பெயர் ஏற்படும். இந்த நிலையில்தான் டாப் இலாக்கா எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை.

யாரையும் நீக்கவில்லை
முதல்வர் ஸ்டாலினையும் சேர்த்து நேற்று 11 அமைச்சர்களின் இலாக்காக்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இவ்வளவு மாற்றங்களை செய்தும் கூட அமைச்சரவையில் ஒரு அமைச்சரை கூட முதல்வர் ஸ்டாலின் நீக்கவில்லை. சில மூத்த அமைச்சர்கள் மீது முதல்வர் ஸ்டாலின் அதிருப்தியில் இருந்தார். 2-3 அமைச்சர்களின் தனிப்பட்ட செயல்பாடுகள் மீது முதல்வர் ஸ்டாலின் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் கூட எந்த அமைச்சரையும் முதல்வர் ஸ்டாலின் நீக்கவில்லை. இது ஒரு வகையில்.. என் அமைச்சரவை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதை காட்டும் போக்கு. ஜெயலலிதா போல அமைச்சர் பதவியில் எப்போது மியூஸிக்கல் சேர் மாற்றம் இருக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தாமல் அமைச்சரவை நிலையாக இருக்கும் என்பதை ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.

2024 தேர்தல்
இன்னொரு பக்கம் 2024 தேர்தலுக்கு திமுக தயாராக இந்த அமைச்சரவை மாற்றம் உதவியாக இருக்கும். திமுகவின் போகஸ் எல்லாம் 2024 தேர்தலை நோக்கி திரும்பி உள்ளது. அதை மனதில் வைத்தே இந்த அமைச்சரவை மாற்றம் நடந்துள்ளது. ஒரு வருடம் ஆகிவிட்டதே என்று கொஞ்சம் சோர்வடைந்த அமைச்சர்கள் "ரீ ஸ்டார்ட்" செய்த லேப்டாப் போல வேகமாக செயல்பட உதவியாக இருக்கும். அதோடு மக்களோடு அதிக நெருக்கம் உள்ள இளைஞர் நலன், விளையாட்டு துறை மூலம் இளைஞர்களிடம் உதயநிதி எளிதாக சென்று சேர முடியும். உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை, இளைஞர் நலன் பிரிவு அமைச்சராக இருந்தால், அவரால் இளைஞருடன் நேரடியாக கலந்துரையாட முடியும் என்று திமுக நினைக்கிறது. இதன் மூலம் இளைஞர்கள் இடையே உதயநிதி ஸ்டாலின் அடுத்த கட்ட தலைவராக கவனம் பெறுவார் என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி பல விஷயங்களை மனதில் வைத்துதான் நேற்று அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications