தவெகவை பார்த்து பயப்படுகிறார்கள்.. திமுகவின் 50% வாக்குகள் விஜய் பக்கம் வந்துள்ளது.. ஆதவ் அர்ஜுனா!
சென்னை: திமுகவில் உள்ள 50 சதவிகித வாக்குகள் ஏற்கனவே தவெக பக்கம் திரும்பிவிட்டதாகவும், விஜய் சுற்றுப்பயணத்தின் போது தமிழ்நாடு முழுவதும் ஒரு எழுச்சியை காண்பீர்கள் என்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
அண்மையில் தவெக செயற்குழு கூட்டத்தில் தவெக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும், முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலமாக அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படாது என்றும் தெரிய வந்தது. ஆனாலும் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று தவெகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

செப்டம்பரில் விஜய் சுற்றுப்பயணம்
அதேபோல் ஆகஸ்ட் மாதம் தவெகவின் 2வது மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்றும், செப்டம்பர் மாதம் முதல் தவெக தலைவர் விஜய் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தவெகவின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார்.
ஆதவ் அர்ஜுனா பேட்டி
அதில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், 1977ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியை மொத்தமாக எம்ஜிஆர் பெற்று ஆட்சியை அமைத்தார். 2024 கணக்கின்படி திமுகவிடம் 45 சதவிகித வாக்குகளும், அதிமுக கூட்டணியிடம் 32 சதவிகித வாக்குகளும், சீமானிடம் 8 சதவிகித வாக்குகளும் உள்ளன. ஆனால் 2026ல் இந்த கணக்குகள் மொத்தமாக சுக்குநூறாக உடைந்துபோகும்.
திமுகவின் வெற்றி
திமுக கடந்த 3 தேர்தல்களில் பாஜகவை எதிர்த்து மட்டுமே வென்றுள்ளது. தவெகவின் கொள்கையும் பாஜகவை எதிர்த்து தான் உள்ளது. ஏற்கனவே பாஜகவை மக்கள் தூக்கியெறிந்துவிட்ட நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தல் சிறந்த நிர்வாகியை தேர்வு செய்வதற்கான தேர்தல். ஊழலுக்கான எதிரானவர்களுக்கான தேர்தல். விஜய் தனது ரூ.300 கோடி வருமானத்தை கைவிட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார்.
திமுகவின் வாக்குகள்
எம்ஜிஆர் எப்படி திமுகவின் 50 சதவிகித வாக்குகளை உடைத்தாரோ, அதேபோல் இம்முறையும் தவெகவுக்கு திமுகவின் 50 சதவிகித வாக்குகள் மாற்றம் அடைந்துவிட்டது. அண்மையில் எடுக்கப்பட்ட எங்களின் கருத்துக் கணிப்புகளில் தவெகவுக்கு 25 சதவிகித வாக்கு வங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. விஜய் சுற்றுப்பயணம் முடிவடைந்த பின், அது இன்னும் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுவிடும்.
திமுகவுக்கு பயம்
பாஜக எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், அந்த கட்சிக்கான வாக்கு வங்கி அதிகரிக்க போவதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த தேர்தலை கவனித்தாலே அது தெரியும். தவெகவை பார்த்து ஏற்கனவே திமுக பயப்பட தொடங்கிவிட்டது. அதன் காரணமாகவே போராடுவதற்கு கூட எங்களுக்கு உரிய அனுமதி வழங்கப்படுவதில்லை.
தனித்து நின்று வெல்வோம்
எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக தொண்டர்கள் இன்று தவெகவை விரும்பி கொண்டிருக்கிறார்கள். விஜய் தான் முதல்வர் வேட்பாளர். எப்படி ஜெயலலிதா தனித்து நின்று வெற்றியை பெற்றாரோ, அதுபோல் தவெகவும் வெற்றியை பெறும். வெல்வதற்கு கூட்டணி முக்கியம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications