நியாயமே இல்லை.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு ஆதரவாக முன்னாள் நீதிபதிகள் 56 பேர் கூட்டாக அறிக்கை
சென்னை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றியவர்கள் உட்பட 56 முன்னாள் நீதிபதிகள் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவின் கருத்தியல் மற்றும் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்காத நீதிபதிகளை அச்சுறுத்துவதற்கான ஒரு தைரியமான முயற்சி என்று கண்டித்துள்ளனர்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் 56 பேர் சேர்ந்து அறிக்கையில் கூறுகையில்,"நாங்கள், மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளும் மற்றும் மாண்புமிகு உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்ய சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு மிகுந்த ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது, சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவின் கருத்தியல் மற்றும் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்காத நீதிபதிகளை அச்சுறுத்துவதற்கான ஒரு தைரியமான முயற்சியாக நாங்கள் பார்க்கிறோம். இத்தகைய முயற்சி அனுமதிக்கப்பட்டால், அது ஜனநாயகத்தின் ஆணிவேரையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் நிச்சயம் சிதைத்துவிடும். நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் குறிப்பிடப்பட்ட காரணங்கள், மிகவும் அரிதான, விதிவிலக்கான மற்றும் தீவிரமான அரசியலமைப்பு நடவடிக்கையான பதவி நீக்கத்தை நியாயப்படுத்தப் போதுமானதாக இல்லை.
நெருக்கடி நிலையின் இருண்ட காலகட்டத்தில் கூட, அப்போதைய அரசாங்கம், தங்களுக்கு ஒத்துழைக்க மறுத்த நீதிபதிகளைத் தண்டிப்பதற்காகப் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டதை இந்த சூழலில் நினைவுபடுத்தலாம். கேசவானந்த பாரதி தீர்ப்புக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் மூன்று மூத்த நீதிபதிகளைப் பதவி நீக்கியதும், நீதிபதி எச்.ஆர். கண்ணா ஒதுக்கப்பட்டதும், அரசியல் ஆதிக்கம் நீதித்துறை சுதந்திரத்தைப் பெரிதும் சேதப்படுத்த முடியும் என்பதற்கான கசப்பான நினைவூட்டல்கள் ஆகும். இந்தத் தாக்குதல்கள் இருந்தபோதிலும், நமது நீதித்துறை காலப் பரீட்சையில் நின்று அனைத்து வெளிப்புற அழுத்தங்களையும் எதிர்த்து நின்றுள்ளது.
தற்போதைய நடவடிக்கை ஒரு தனிப்பட்ட நீதிபதிக்கு எதிரான விஷயம் அல்ல. இது நமது அரசியலமைப்பு வரலாற்றில் தெளிவான மற்றும் மிக ஆழமாக பாதிக்கும் விஷயம் ஆகும். அரசியல் வகுப்பினரின் சில பிரிவுகள், தங்களின் நலன்களுக்கு இணங்காதபோதெல்லாம், நீதித்துறை முடிவுகளை இழிவுபடுத்துவதற்கும், உயர் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுப்பதற்கும் முயற்சிகள் நடக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட முன்னோடியில்லாத பதவி நீக்க முயற்சிகள், அதற்கு அடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளான ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ. பாப்டே மற்றும் டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் பதவியில் இருந்தபோது, அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அவதூறுப் பிரச்சாரங்கள் மற்றும் தற்போது பதவியில் இருந்து விடைபெற்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் மற்றும் தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதியான சூர்யா காந்த் ஆகியோரின் ஒரு தீர்ப்பு அல்லது ஒரு கருத்து, ஒரு குறிப்பிட்ட அரசியல் பிரிவுக்கு அதிருப்தி அளிக்கும்போதெல்லாம் டார்க்கெட் செய்யப்பட்டது, அதன் தொடர்ச்சியாக நடந்துள்ளது.
தற்போதுள்ள முயற்சி, நீதித்துறை முடிவுகளின் மீது அரசியல் காரணங்களுக்காக நீதித்துறை விமர்சனத்தை அனுமதிக்கும் தத்துவார்த்த கொள்கையில் மட்டும் வேரூன்றவில்லை; மாறாக, இது அரசியல் அழுத்தத்திற்கான ஒரு கருவியாகப் பதவி நீக்கம் மற்றும் பொது அவதூறு போன்றவற்றை ஆயுதமாக்கும் முயற்சியாக உள்ளது. இது நேரடியாக நீதித்துறை சுதந்திரத்தின் இதயத்தையும் அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் தாக்குகிறது.
பதவி நீக்க நடைமுறையின் உண்மையான நோக்கம் நீதித்துறையின் ஒருமைப்பாட்டைக் காப்பதாகும். நீக்கும் அச்சுறுத்தலை, நீதிபதிகளை அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்கச் செய்வதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவது, ஒரு அரசியலமைப்புப் பாதுகாப்பை அச்சுறுத்தும் கருவியாக மாற்றுவதாகவே பார்க்கிறோம். இத்தகைய அணுகுமுறை ஜனநாயக விரோதமானது, அரசியலமைப்புக்கு எதிரானது.. சட்டத்தின் ஆட்சிக்கு ஒரு சாபக்கேடு.
ஒரு பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தனது நீதித்துறை கடமையைச் செய்ததற்காகப் பதவி நீக்கம் செய்ய மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி ஒரு தனிப்பட்ட நீதிபதிக்கு எதிரான நிகழ்வு அல்ல, மாறாக நீதித்துறையின் கண்ணியம் மற்றும் சுதந்திரத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதலின் ஒரு பகுதியாகவே பார்க்கிறோம். இன்று டார்கெட் செய்யப்படுவது ஒரே ஒரு நீதிபதியாக இருக்கலாம்; நாளை, அது ஒட்டுமொத்த நீதித்துறையும் டார்க்கெட் செய்யப்படும்.
எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர் குழும உறுப்பினர்கள், பொது சமூக அமைப்புகள் மற்றும் குடிமக்கள் என அனைத்து தரப்பினரையும் இந்த நடவடிக்கையை ஒருமித்த குரலில் கண்டிக்கவும், ஆரம்ப நிலையிலேயே இதனைத் தடுத்து நிறுத்தவும் அழைக்கிறோம். நீதிபதிகள் தங்கள் பதவிப் பிரமாணம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான விசுவாசத்திற்கு மட்டுமே விடையளிக்கக் கடமைப்பட்டவர்கள், அரசியல் அழுத்தங்களுக்கோ அல்லது கருத்தியல் அழுத்தங்களுக்கோ அல்ல.
சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு குடியரசு நாட்டில், தீர்ப்புகள் மேல்முறையீடுகள் மற்றும் சட்டரீதியான விமர்சனங்களால் மட்டுமே சோதிக்கப்படுகின்றன; அரசியல் இணக்கமின்மைக்கான பதவி நீக்க அச்சுறுத்தல்களால் அல்ல." இவ்வாறு ஓய்வு பெற்ற நீதிபதிகள் காட்டமாக தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். இதில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேர் உள்பட 56 ஓய்வு பெற்ற நீதிபதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.


-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications