தமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு.. வைகோவால் மீண்டும் அனல் பறக்கும் அவை
Recommended Video
சென்னை: தமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலகத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மேலவை எனப்படும் ராஜ்யசபாவுக்கு ஒவ்வொரு மாநிலங்களிலிருந்து அந்த மாநிலத்தில் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்தந்த மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடியும் போது இந்த தேர்தல் நடைபெறும்.
அதன்படி தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல், அர்ஜூனன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி ராஜா, திமுக சார்பில் கனிமொழி ஆகியோர் 2013-ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டனர்.

ஜூலை 18-இல் தேர்தல்
இவர்களது பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-இல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 6 இடங்கள்
இதில் மொத்தம் 6 இடங்களுக்கு அதிமுக சார்பில் சந்திரசேகரன், முகம்மது ஜான், பாமகவின் அன்புமணியும், திமுக சார்பில் வில்சன், சண்முகம், வைகோவும் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இதனிடையே வைகோவுக்கு தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

போட்டியின்றி தேர்வு
இதனால் வைகோவின் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் வைகோவின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ராஜ்யசபாவுக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ராஜ்யசபா
அவர்கள் தலைமைச் செயலக செயலாளர் சீனிவாசனிடம் இருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினர். அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 3 எம்பிக்களும் முதல்வர் எடப்பாடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அது போல் திமுக சார்பில் வெற்றி பெற்ற 3 பேரும் முக ஸ்டாலின் முன்னிலையில் சான்றிதழை பெற்றனர். இனி ராஜ்யசபாவில் வைகோவின் குரல் ஓங்கி ஒலிக்க போகிறது.












Click it and Unblock the Notifications