புது உச்சம்.. தமிழகத்தில் தீயாக பரவும் கொரோனா.. 6785 பேர் பாதிப்பு.. 21வது நாளாக அசத்தும் சென்னை
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 6,785 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட புள்ளி விவரத்தில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதை இந்த புள்ளி விவரம் காட்டுகிறது.
கொரோனா கட்டுக்குள் அடங்காமல் போய்க் கொண்டிருப்பதை இந்த புள்ளி விவரம் காட்டுகிறது. இதோ விவரம்:

பரிசோதனைகள்
தமிழகத்தில் இன்று மட்டும் 65,150 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 22,23,019 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 6,504 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை 1,43,297 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,132 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை நிலவரம்
சென்னையில் இன்று புதிதாக 1,299 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை மொத்தமாக 92,206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,969 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை பொறுத்த அளவில் 21வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று மேலும் 88 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது. பிற மாவட்டங்களில், அதிகபட்சமாக, விருதுநகர் மாவட்டத்தில் இன்று 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 454 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்ட நிலவரம்
சென்னை - 1299, விருதுநகர் - 424, செங்கல்பட்டு - 419, திருவள்ளூர் - 378, காஞ்சிபுரம் - 349, மதுரை - 326, தூத்துக்குடி - 313, குமரி -266, தேனி -234, ராணிப்பேட்டை - 222, திருச்சி - 217, கோவை - 189, தஞ்சை-186, கள்ளக் குறிச்சி-179, வேலூர் -174, நெல்லை-171 போன்றவை, அதிகம் கொரோனா பரவல் உள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications