பயப்படத் தேவையில்லை.. HMPV தொற்றால் பாதிப்பில்லை! அரசு கொடுத்த அப்டேட்.. விவாதிக்க அதிமுக நோட்டீஸ்
சென்னை: இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே நாளில் ஏழு பேருக்கு எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்தை தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் அளித்திருக்கிறது அதிமுக.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் வூகான் மாநிலத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அதற்கு பிறகு உலகம் முழுவதும் பாதிப்பை தந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் மீண்டு வந்திருக்கும் நிலையில் சீனாவின் சில பகுதிகளில் ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் ( HMPV) என்று அழைக்கப்படும் குழந்தைகளை தாக்கக்கூடிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவிலும் அதன் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு குழந்தைகளுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதை அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
HMPV வைரஸ்:
இதேபோல தமிழகத்திலும் குழந்தைகளுக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் பீதி அடைய தேவை இல்லை எனவும், சாதாரண காய்ச்சல், சளி, இருமல், மூக்கடைப்பு, தொண்டை வலி, சோர்வு ஆகியவை தான் இதன் அறிகுறிகள், பெரியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இந்த நோய் பரவும். அதே நேரத்தில் உரிய சிகிச்சை அளித்தால் உடனடியாக சரி செய்து விடலாம்.
அச்சம் தேவையில்லை:
தற்போது சென்னை, சேலத்தில் இரண்டு பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அச்சமடைய தேவையில்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை கூறியுள்ளது. மேலும் சென்னை உட்பட தமிழகத்தின் இரு பகுதிகளில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த காலகட்டத்தில் இது போன்ற பாதிப்பு ஏற்படுவது வழக்கம் தான் என்றும், இன்புளுயன்சா பாதிப்பு ஏற்பட்டால் தான் கூடுதல் கவனம் தேவை. தற்போதைக்கு மக்கள் இதனை பார்த்து பயப்பட தேவையில்லை, இந்த வைரஸ் புதிதாக வந்ததும் இல்லை இதை பெரிதுபடுத்தி அச்சுறுத்துவது தவறானது எனக் கூறப்பட்டுள்ளது.
அதிமுக நோட்டீஸ்:
மேலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடை பிடிப்பது உள்ளிட்டவற்றின் மூலம் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாஹூ தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் எச்எம்பிவி வைரஸ் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என அதிமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது. அக்கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்.
தமிழக சட்டசபை:
இன்று தமிழக சட்டசபையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தெரிவித்து பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை ஆளுநரின் உரை மீதான விவாதம் நடைபெற இருக்கும் நிலையில் இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி நோட்டீஸ் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications