ருத்ர தாண்டவம் ஆடும் கத்தரி வெயில்! வேலூரை ஓவர்டேக் செய்த இந்த நகரம்! பொதுமக்கள் கடும் அவதி
சென்னை: தமிழகத்தில் கத்தரி வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ள நிலையில், மாநிலத்தில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பு, மே மாதம் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ற நிலை மாறி, இப்போதெல்லாம் பிப். இறுதி முதலே வெயிலின் தாக்கம் வெளுத்து வாங்குகிறது.
பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் புவி வெப்ப மயமாதலே இதற்கு முக்கிய காரணம் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இதன் காரணமாகப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கத்தரி வெயில்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே, கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் மோசமாக இருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தொடங்கியது. வரும் மே 28ஆம் தேதி வரை இந்த கத்தரி வெயிலின் தாக்கம் தொடரும். கத்தரி வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் மோசமாக இருக்கும் என்பதால் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எங்கு அதிகம்
இதனிடையே இன்று மட்டும் தமிழ்நாட்டில் மொத்தம் 7 இடங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே வேலூரில் தான் தமிழகத்திலேயே வெயிலின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. இந்நிலையில், இன்றைய தினமும் மதுரை விமான நிலையத்தில் பதிவான வெப்பம் வேலூரை ஓவர்டேக் செய்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் இன்று அதிகபட்சமாக 104.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

சதம் அடித்த வெயில்
மதுரை விமான நிலையத்தைத் தொடர்ந்து அடுத்து, வேலூரில் 103.28 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதேபோல தஞ்சையில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், திருத்தணி, சென்னை மீனம்பாக்கத்தில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதேபோல சென்னை நுங்கம்பாக்கத்தில் 96.98 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி உள்ளது.

மற்ற மாவட்டங்கள்
இவை தவிரக் கரூர் மரமத்தி, தொண்டி ஆகிய இடங்களிலும் சதம் அடித்துள்ளது. மாநிலத்தில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகப் பதிவாகி உள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கப் பொதுமக்கள் மலை பிரதேசங்களுக்குப் படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக உதகை, கொடைக்கானல் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications