Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா 76வது பிறந்தநாள்.. உருவப் படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

Subscribe to Oneindia Tamil

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சராக 6 முறை பதவி வகித்தவர் ஜெயலலிதா. கடந்த 1948 ஆம் ஆண்டு பிறந்த இவர், திரையுலகில் முன்னணி நடிகையாகவும், அதன் பின்னர் தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சகாப்தமாகவும் திகழ்ந்தவர். கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று அவரது 76 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

76th birthday of Jayalalithaa is being celebrated today by ADMK

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில், "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமது வாழ்வின் உயிர் மூச்சாகக் கொண்டு, கழகத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டவராய் தவ வாழ்வு வாழ்ந்து, தமிழ் நாட்டின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்து, "தனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை; தனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை; தான் வாழ்வதே இந்த இயக்கத்திற்காகத் தான்; தமிழக மக்களுக்காகத் தான்" என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம்முடைய இயக்கத்தைப் பற்றியும், மக்களைப் பற்றியும் சிந்தித்து, தமிழ் நாட்டு மக்களுக்காக இந்த இயக்கம் ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் நிறைய இருக்கின்றன என்று வீரமுழக்கமிட்டு அரும்பணியாற்றியவர்.

இத்தகைய போற்றுதலுக்குரிய இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76-ஆவது பிறந்த நாளான 24.2.2024 சனிக் கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி, "நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ்" சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள "புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76-ஆவது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை" வெளியிட உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும்; மாவட்டக் கழக நிர்வாகிகள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நம் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமது பிறந்த நாளையொட்டி, "ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து, கழக உடன்பிறப்புகள் அவரவர் சக்திக்கேற்ப ஏழை-எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தால், அந்நிகழ்வுகள் பயன்பெறுவோரையும் மகிழ்விக்கும்; இம்மண்ணில் தமிழக மக்களுக்காக உழைத்திடும் பெருவாய்ப்பு பெற்ற என்னையும் அது மேலும் உற்சாகப்படுத்தும்" என்றும்; "எளிமையோடும், எளியோருக்கு உதவிடும் நல்ல நோக்கத்தோடும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மூலம் என் அன்புக்குரிய கழகக் கண்மணிகளால் பயன்பெறும் வறியவர்களின் முகத்தில் படரும் புன்னகை ஒன்றே நம்மையும், நம் ஒப்பில்லா இயக்கத்தையும் ஆராதிக்கின்ற நிகழ்வாக அமையும் என்பதை கழக உடன்பிறப்புகள் உணர்ந்து செயல்பட வேண்டும்" என்றும் மாண்புமிகு அம்மா அவர்கள் நமக்கெல்லாம் ஏற்கெனவே அறிவுறுத்தி உள்ளார்கள்.

அதன்படி, மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்த நாளான 24.2.2024 அன்று, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில் ஆங்காங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் கழக கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும்; கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கழகக் கொடியினை ஏற்றி வைத்தும்; தத்தமது பகுதிகளில் ஆங்காங்கே புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய திருஉருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கண் தானம், ரத்த தானம் செய்தல், மருத்துவ முகாம் நடத்துதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல்; மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல், இலவச திருமணங்களை நடத்தி வைத்தல், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல், வேஷ்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 24.2.2024 அன்று இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய திருஉருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு மற்றும் அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பித்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+