தவெக முதல் மாநாடு.. குடிச்சுட்டு வரப் படாது.. பைக் சாகசம் செய்யவே கூடாது! புஸ்ஸி ஆனந்தின் 8 பாயிண்ட்
சென்னை: தனது கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய். இந்நிலையில் மாநாட்டுக்கு வருபவர்கள் குடித்துவிட்டு வரக் கூடாது உள்ளிட்ட 8 கோரிக்கைகளை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் விடுத்துள்ளார்.
செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற இருப்பதாகவும், இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கை உள்ளிட்டவை குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதை அடுத்து மாநாட்டை நடத்துவதற்காக தீவிர ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்தனர். மாநாட்டுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என உச்சகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் 21 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதினார். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? அவசர காலங்களில் மருத்துவ வசதி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதா? என கேட்கப்பட்டது.
இதனையடுத்து மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்த நிலையில், தற்போது மாநாடு தள்ளிப் போயுள்ளது. மாநாட்டுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட விவகாரங்களில் செப்டம்பர் மாதம் பாதி கடந்துவிட்ட நிலையில், தற்போது அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய். இதனையடுத்து மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
தற்போது மாநாட்டுக்கான முதற்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர். மேலும் மாநாட்டுக்கு ஆட்களை அழைத்துச் செல்வதற்காக வாகனங்களை முன்னதாகவே அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே மாநாடு நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தவெக பொதுச் செயலாலரான புஸ்ஸி ஆனந்த், மாநில நிர்வாகிகள், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு 8 கோரிக்கைகளை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் விடுத்துள்ளார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
அதன்படி," தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு வரும் கட்சித் தோழர்கள் மது அருந்திவிட்டு வரக்கூடாது, பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும், சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாகசங்களில் ஈடுபடவே கூடாது.
அதிகாரிகளிடம் மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டும், கிணறு மற்றும் ஆபத்தான பகுதிகள் இருந்தால் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும், மருத்துவக் குழு மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும், பேருந்து மற்றும் வேன்களில் தகுந்த எண்ணிக்கையில் மட்டும் தொண்டர்களை அழைத்து வரவேண்டும்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications