தங்கம் விற்கும் விலையில்.. டாய்லெட் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.85 லட்சம் மதிப்புள்ள ‘பிஸ்கட்’! பரபர
சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள கழிவறை குப்பைத் தொட்டி ஒன்றில் வீசப்பட்ட 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,250 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில், பல்வேறு வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு தங்கம் கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து உள்ளது. சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்படும் தங்கத்தை விமான நிலையங்களில் பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் மீது தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வந்தாலும் தங்க கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் ஒப்பந்த ஊழியர்கள் தூய்மைப் பணி செய்து கொண்டிருந்த போது, கழிவறை அருகே உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் பார்சல் ஒன்று கிடந்துள்ளது.
குப்பைத் தொட்டியில் கேட்பாரற்று கிடந்த பார்சல் தொடர்பாக தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்புரவு தொழிலாளர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த அதிகாரிகள், கழிவறையின் குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த பார்சலில் தங்கக் கட்டிகள் இருப்பதை கண்டறிந்தனர். சுமார் 85 லட்சம் மதிப்புள்ள 1.25 கிலோ கிரோம் கடத்தல் தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கக் கட்டிகளை கடத்தி வந்து சென்னை விமான நிலைய கழிவறையில் போட்டுச் சென்றது யார்? இதன் பின்னணி என்ன? என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட 4 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு பயணிகளும் சோதனை செய்யப்பட்ட நிலையில் தான், கழிப்பறை குப்பைத் தொட்டியில் 85 லட்சம் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications