தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு
சென்னை: பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 44 தனித் தொகுதிகளில் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களில் 90% கிறிஸ்தவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் மனுவில் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் வேளையில், தனித்தொகுதிகள் தொடர்பான ஒரு சட்டப்போராட்டம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. இதன் பின்னணியில் உள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் தற்போதைய சென்னை உயர் நீதிமன்ற வழக்கைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவானபோது, 'அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதியினர்) ஆணை, 1950' பிறப்பிக்கப்பட்டது. இதன் பிரிவு 3-ன் படி, "இந்து மதத்தைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றும் எவரும் பட்டியலினத்தவராகக் (SC) கருதப்பட மாட்டார்கள்" என்று கூறப்பட்டது. பின்னர் 1956-ல் சீக்கியர்களும், 1990-ல் பௌத்தர்களும் இதில் இணைக்கப்பட்டனர். ஆனால், கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு இந்த இடஒதுக்கீடு அந்தஸ்து வழங்கப்படவில்லை.
மதம் மாறிய தலித்துகளுக்கும் எஸ்சி (SC) அந்தஸ்து வழங்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாகப் போராட்டங்களும், நீதிமன்ற வழக்குகளும் நடந்து வந்தன. "மதம் மாறினாலும் எங்கள் சமூக நிலை மாறவில்லை, எனவே எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்" என்பது அவர்களின் கோரிக்கையாக இருந்தது.
இந்த நீண்ட கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த மார்ச் 24, 2026 அன்று உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில்: பட்டியலினத்தவ என்ற அந்தஸ்து இந்து, சீக்கியம் மற்றும் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே பிரத்யேகமானது. ஒரு நபர் தனது தனிப்பட்ட அல்லது ஆன்மீகத் தேவைக்காக வேறு மதத்திற்கு (கிறிஸ்தவம் அல்லது இஸ்லாம்) மாறினால், அவர் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ள எஸ்சி இடஒதுக்கீடு சலுகைகளை இழக்கிறார். இந்தத் தடை "முழுமையானது" . இதில் எந்த விதிவிலக்கும் கிடையாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்தது.
அர்ஜுன் சம்பத் வழக்கு
இந்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில் தமிழகத்தில் உள்ள 44 தனித்தொகுதிகளில் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 90% பேர் கிறிஸ்தவர்கள் என்று அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். இவர்கள் அதிகாரப்பூர்வமாகச் சாதிச் சான்றிதழ் வைத்திருந்தாலும், நடைமுறையில் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவதால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இவர்கள் தனித்தொகுதியில் போட்டியிடத் தகுதியற்றவர்கள் என்று கூறியுள்ளார்.
வரும் ஏப்ரல் 7, 2026 அன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. அதற்குள் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு (Returning Officers) உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். அதாவது, இந்து, சீக்கியம், பௌத்தம் தவிர பிற மதத்தைப் பின்பற்றுவோரின் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பந்த் வழக்கில் கூறியுள்ளார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் எடுக்கும் முடிவு தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளின் தலையெழுத்தையே மாற்றும். பல முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இந்த விதியின் கீழ் சிக்கினால், அது தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஏப்ரல் 6, 2026 என்றும், ஏப்ரல் 7, 2026 அன்று வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும் என்றும், எனவே இந்து, சீக்கியம் அல்லது பௌத்தம் தவிர பிற மதங்களைப் பின்பற்றும் வேட்பாளர்கள் தனித் தொகுதிகளில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களை நிராகரிக்கத் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களைத் தலைமைத் தேர்தல் அதிகாரி உடனடியாக வழங்க வேண்டும் என்று மனுதாரர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications