களத்தில் இறங்கிய செந்தில் பாலாஜி.. ஆபரேஷனில் "அவரும்" இருக்காராமே! ஓபிஎஸ் ரைட் ஹேண்டை தூக்கும் திமுக
டெல்டாவில் திமுகவை மேலும் வலிமையாக்கும் வகையில் அவரை தட்டி தூக்க திமுக முயன்று வருவதாக கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தோல்வி அடைந்த நிலையில், அவரிடம் நெருக்கமாக இருந்த நிர்வாகிகள் பலர் அவரிடம் இருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஏற்பட்ட தோல்வி ஓ பன்னீர்செல்வத்தை அடித்து வீழ்த்தி இருக்கிறது. இந்த தோல்வி காரணமாக ஓ பன்னீர்செல்வம் பெரும் மன வருத்தத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3 நாட்களுக்கு முன் அதிமுக பொதுக்குழு வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் தீர்ப்பு வழங்கினர்.

வழக்கு
அதில் அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. அதோடு ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதும் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

தோல்வி மேல் தோல்வி
ஓ பன்னீர்செல்வத்திற்கு அரசியல் ரீதியாக அடுத்தடுத்து தோல்வி மேல் தோல்விதான் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில்தான் ஈரோடு கிழக்கு சட்டசபை சமயத்திலேயே அவர் சின்னத்தை இழந்தார். அதை கையெழுத்து போடும் அதிகாரம் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு சென்றது. அதோடு ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் அவருடைய அணியில் இருந்து வெளியேறினார். கொத்து கொத்தாக நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு எடப்பாடி அணியில் அவர் இணைந்தார். இது போக அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி என்று அண்ணாமலை சமீபத்தில் அறிக்கை ஒன்றில் கூறி உள்ளார். இப்படி ஓ பன்னீர்செல்வம் வரிசையாக தோல்வி அடைந்து வருகிறார்.

வெளியேற்றம்
இந்த நிலையில்தான் அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள் அவரை விட்டு வெளியேறும் மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இவரை நம்பி இருந்தால் அரசியல் எதிர்காலம் சூனியம் ஆகிவிடும் என்று அரசியல் தலைவர்கள் பலர் நினைக்கிறார்கள். இதில் சிலர் அதிமுக பக்கமே செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் இதில் சிலரை மட்டும் அதிமுகவிற்கு வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி கூறி உள்ளார். பலரை ஏற்றுக்கொள்வேன்.. சிலரை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறி உள்ளார். ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கத்தை குறிப்பிட்டு அவர் இப்படி சொல்லி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வைத்தியலிங்கம்
வைத்தியலிங்கம் ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமாக இருப்பதாலும், அவருக்கு எதிராக கொங்கு மாஜிக்கள் சிலர் கடும் கோபத்தில் இருப்பதாலும், அவரை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவரை கொக்கிபோட்டு திமுகவிற்கு தூக்க அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் டீம் முயன்று கொண்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே அதிமுகவில் இருந்த போது செந்தில் பாலாஜி - வைத்தியலிங்கம் நட்பாக இருந்தனர். அது போக தஞ்சாவூர் பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ், ஒரத்தநாடு எம்எல்ஏவாக இருக்கும் வைத்தியலிங்கத்திடம் அடிக்கடி நிர்வாக ரீதியாக பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறதாம். இந்த நெருக்கத்தை வைத்து டெல்டாவில் திமுகவை மேலும் வலிமையாக்கும் வகையில் அவரை தட்டி தூக்க திமுக முயன்று வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications