விளையாடும் போது விசிலை விழுங்கிய ஒரு வயது குழந்தை உயிரிழப்பு.. சென்னை பூந்தமல்லி அருகே சோகம்
சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் விளையாடும் போது தெரியாமல் விசிலை விழுங்கிய ஒரு வயது சிறுமி தொண்டை அடைத்து பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி அருகே லட்சுமிபுரம் சாலை பத்மாவதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(வயது38). ஆனந்த ராஜ் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வனஜா. இந்த தம்பதிக்கு தர்சன் என்ற 3 வயது மகனும், கயல்விழி என்ற 1 வயது பெண் குழந்தையும் உண்டு.

குழந்தை கயல்விழி வழக்கம்போல விளையாட்டு பொருட்களை வைத்து வீட்டில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது விசிலை வாயில் வைத்து விளையாடிக்கொண்டு இருந்தது. இதில் எதிர்பாராத விதமாக கயழ்விழி தொண்டைக்குள் விசில் சென்றது. விசிலை விழுங்கியதில் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை கயல்விழி மயங்கியது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் கயழ்விழியை தூக்கினர். அப்போது குழந்தையின் வாயில் இருந்து விசில் கீழே விழுந்தது. அப்போது தான் குழந்தை கயல்விழி விசிலை விழுங்கியதனால் தான் மூச்சுத்திணறி மயங்கியது அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுமி கயல்விழியை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன குழந்தை கயல்விழி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
விளையாடும் போது ஒரு வயது குழந்தை விசிலை விழுங்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications