டாஸ்மாக் கடைகளுக்கான போலீஸ் பாதுகாப்பை குறைக்க கோரி வழக்கு.. தமிழக அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கான பாதுகாப்பை குறைத்து, கொரோனா தடுப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு பணிகளுக்கு அதிக காவல்துறையினரை ஈடுப்படுத்த கோரிய வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கோவையை சேர்ந்த தேசிய அனைத்து மத நண்பர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கொரோனா பரவும் என்பதால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட டாஸ்மாக் மதுப்பான கடைகள் மே மாதம் முதல் மீண்டும் செயல்ப்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இதன் காரணமாக கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்ட காவல்துறையினர் மதுபான கடைகளின் பாதுகாப்புக்காக பணியில் ஈடுப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் மொத்தமாக உள்ள 5824 டாஸ்மாக் மதுப்பான கடைகளின் பாதுகாப்புகாக 1,827 காவல்நிலையங்களில் உள்ள காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய சூழல் எழுந்தது.
குறிப்பாக ஒரு காவல்நிலையத்தில் இருக்கும் 10 காவல்ர்களில் 6 பேரை டாஸ்மாக் பாதுகாப்பு பணிகளுக்கும் மீதமுள்ள 4 பேரை கொரோனா தடுப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு பணிகளுக்கும் தற்போது ஈடுப்படுத்தப்பட்டு.வருவதாக அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு போதுமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இல்லாத காரணத்தால் மக்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு கொரோனா தொற்று அதிக பரவி வருவதாக குற்றஞ்சட்டியுள்ளார். எனவே டாஸ்மாக் கடைகளின் பாதுகாப்பிற்காக ஈடுப்படுத்தப்பட்டுள்ள காவல்துறையினரை குறைக்க வேண்டும் அல்லது ஆயுதப்படை போன்ற மற்ற காவல் துறையினரை டாஸ்மாக் கடை பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
அடேங்கப்பா! இன்னா ஜனம்- டாஸ்மாக் கடையில் மட்டுமில்லை.. சென்னை ரிச்சி தெருவிலும்!
அதே வேளையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் கொரானா தடுப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கான பணிகளில் அதிக காவல்துறையினரை ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, மனு தொடர்பாக 2 வாரத்தில் தமிழக உள்துறை, வருவாய் துறை செயலாளர்கள், தமிழக டிஜிபி, டாஸ்மாக் நிர்வாகம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.