உதயநிதி ஸ்டாலின் எடுத்த பெரிய முடிவு.. திமுக சீனியர் அமைச்சர்கள் பெருமூச்சு விடலாம்.. புதிய தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் என்பது இப்போது நடக்க போகிறது.. அடுத்து நடக்க போகிறது.. நாளை நடக்க போகிறது. இன்று நடக்க போகிறது ஒவ்வொரு நாளும் செய்திகள் கடந்த ஒரு மாதமாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை பிற்பகல் 3.30மணிக்கு அமைச்சரவை மாற்றம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, துணை முதல்வராக பதவியேற்கும் போது, கூடுதல் துறைகள் தனக்கு வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் குறித்து கடந்த ஒன்றரை மாதங்களில் பல செய்திகள் வெளியாகின. காரணம் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்க போவது உறுதி என்றாலும், எப்போது என்று தெரியாமல் இருந்து வந்தது தான். செந்தில் பாலாஜி வெளியே வந்த பின்னர் தான் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று செய்திகள் கடந்த சில வாரங்களே வெளியாகி வந்தன.

தற்போது திமுகவில் அமைச்சரவை பட்டியல் படி அதிகாரம் என்பது முதல்வருக்கு அடுத்தபடியாக உதயநிதி இல்லை.. ஆனால் அதிகார நிலவரப்படி பார்த்தால், உதயநிதி ஸ்டாலின் தான் அதிகாரமிக்க அமைச்சராக உள்ளார். ஏனெனில் விளையாட்டு துறையை தாண்டி, சிறப்பு திட்ட செயலாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்கள் துறை உதயநிதி வசம் தான் உள்ளது. சிறப்பு திட்டங்கள் , செயலாக்கத்துறை என்பது கிட்டத்தட்ட முதல்வரின் பாதி அதிகாரத்திற்கு சமமான பதவியாகும். அதனால் உதயநிதி ஸ்டாலின், தனக்கு தொடர்புடைய அனைத்து துறைகளிலும் அது சம்பந்தபட்ட அமைச்சர்களுடன் சேர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்துள்ளார். செந்தில் பாலாஜி வழக்கை பொறுத்தவரை, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக 3 ஊழல் வழக்குகளில் 2000 பேர் குற்றம் சாட்டப்பட்டு, 550 பேர் அரசு தரப்பு சாட்சியங்களாக இருக்கிறார்கள். செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்ற வழக்கு விசாரணைக்கான அனுமதி அண்மையில் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த வழக்குகளில் விசாரணையை நிறைவு செய்ய 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும் என்பதை உச்ச நீதிமன்றம் மறுக்கவில்லை.
இந்த வழக்கை பொறுத்தவரை ஊழல் வழக்குகளின் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்படாமல் பணமோசடி வழக்கில் குற்றம் நிரூபிக்க முடியாது என்கிற நிலை உள்ளது. எனவே பணமோசடி வழக்கு விசாரணை நடைபெற்றாலும் ஊழல் வழக்குகளின் விசாரணை நிறைவு பெறாமல் பணமோசடி வழக்கில் தீர்ப்பு கூறவும் முடியாது. எனவே, ஊழல் வழக்குகள், பண மோசடி வழக்கு ஆகியவற்றின் விசாரணை சில ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்பது சாத்தியம் இல்லை. இதனால் தான் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜி அமைச்சராக எந்த தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. எனவே அமைச்சரவை மாற்றம் என்பது இப்போத உறுதியாகி உள்ளதாக தெரிகிறது. இதுபற்றி மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன் வெளியிட்ட பதிவில், "பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை மாற்றம் நாளை பிற்பகல் 3.30 க்கு அரங்கேற இருக்கிறது.மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக மூன்று பேர் அமைச்சராக இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராவதில் ஆச்சரியமில்லை.

ஆனால் கடந்த ஐம்பதாண்டுகால வரலாற்றில் முதல் முறையாக உயர்கல்விக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். நிஜமாகவே சமூக நீதியை வலுப்படுத்தும் ஏற்பாடு இது. இந்தப் புரட்சிக்கு சமீப பத்தாண்டுகளில் வித்திட்டவர், மறைந்த ஜெயலலிதாதான். பட்டியலினத்தைச் சேர்ந்தவரை பள்ளிக்கல்வி அமைச்சராக்கியவர் அவர். சிறுபான்மை சமூகத்தவர் கவலைப்பட ஒன்றுமில்லை. ஒருவர் போய் ஒருவர் வருகிறார். பால் வளம் கைமாறுகிறது. சுற்றுச்சூழல் இன்னொருவருக்கு கூடுதலாகப் போகிறது" என்று கூறியுள்ளார்.
பத்திரிக்கையாளர் லட்சுமணன் வெளியிட்ட இன்னொரு பதிவில், நாளை நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தின்போதே உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அறிவிப்பும் வர இருக்கிறது. உதயநிதிக்கு கூடுதலாக எந்தெந்த இலாக்காக்கள் ஒதுக்கப்படும்...? இதற்காக துறைகளை இழக்கப்போகும் சீனியர்கள் யார் யார்..? என்றெல்லாம் கடந்த சில வாரங்களாக வதந்திகள், கேள்விகள் உலா வந்தன.
சீனியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். "அப்படி யாருடைய துறையையும் பறித்து எனக்கு கூடுதலாக எந்தத் துறையும் வேண்டாம். இப்போதிருக்கும் விளையாட்டுத் துறையே போதும்" என்று சொல்லிவிட்டார் உதயநிதி.
வாரிசு என்பதால் ஆணவத்தையோ, அதிகார மமதையையோ காட்டாமல் தன்னடக்கத்தோடு உழைத்தால் தமிழக மக்கள் ரசிக்கவே செய்வார்கள். அந்தத் தடத்திலேயே பயணிக்க விரும்பும் உதயநிதிக்கு வாழ்த்துகள். ஆனாலும், முதல்வர் தன் வசம் இப்போது வைத்துள்ள திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையை உதயநிதிக்கு கூடுதலாகத் தர இருக்கிறார்கள். கற்றுக்கொள்ள நல்ல துறை. இதே தன்னடக்கத்தோடு, கூடுதல் உழைப்போடு புதிய பதவியைத் தொடர மீண்டும் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கையாளர் லட்சுமணன் வெளியிட்ட பதிவின் படி பார்த்தால், உதயநிதி கூடுதலாக எந்த துறையும் கேட்கவில்லையாம். யாருடைய துறையையும் பறித்து எனக்கு கூடுதலாக எந்தத் துறையும் வேண்டாம். இப்போதிருக்கும் விளையாட்டுத் துறையே போதும் என்று உதயநிதி கூறிவிட்டாராம். இதனால் அவர் துணை முதல்வர் பதவியேற்றாலும், இப்போது வகித்துள்ள துறைகளை தாண்டி கூடுதல் துறைகளை கேட்க மாட்டாராம். இதனால் திமுக சீனியர்கள் அமைச்சர்கள் பெருமூச்சுவிடலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications