தாம்பரத்தில் அமையும் புதிய பிரம்மாண்ட அடையாளம்.. அண்ணா நகர் போல ரேடியல் சாலையில் மாஸ்
சென்னை: சென்னைக்கு அண்ணா நகர் கோபுரம் போல, தாம்பரத்திற்கும் ஒரு புதிய அடையாளத்தை உருவாக்க தாம்பரம் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையோரம் உள்ள ஒரு பூங்காவில், இந்த பிரம்மாண்ட கோபுரத்தை அமைக்க 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தாம்பரம் மாநகராட்சியிலேயே காஸ்ட்லியான பகுதியாக உள்ள அங்கு தற்போது கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குள் 200 அடி ரேடியல் சாலை தான் மிக வேகமாகவும், அதிக விலையிலும் வளர்ந்து வரும் பகுதியாக இருக்கிறது. ஜி.எஸ்.டி சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை ஆகிய இரண்டு முக்கிய சாலைகளை இணைக்கும் பாலமாக உள்ளது. ஒரு பக்கம் பல்லாவரம், மறுபக்கம் துரைப்பாக்கம் என சென்னை ஐடி காரிடாரை மிக எளிதாக இணைக்கும் சாலையாக உள்ளது.

ரேடியல் சாலை காஸ்ட்லி ஏரியா
ரேடியல் சாலையில் தற்போது பிரம்மாண்டமான ஐடி பூங்காக்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் வந்துள்ளன. இதனால் அங்கு வேலை செய்பவர்கள் தங்குவதற்கு அந்த இடத்தையே தேர்வு செய்கிறார்கள்.
அதனால் சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனங்கள் அனைத்தும் இப்போது ரேடியல் சாலையைச் சுற்றித்தான் தங்கள் பிரம்மாண்ட திட்டங்களைச் செயல்படுத்துகின்றன. இந்தசூழலில் தான் தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2-ல் உள்ள ரேடியல் சாலைப் பகுதியில், சுமார் 2 ஏக்கர் ஓ.எஸ்.ஆர் நிலத்தில் இந்த கோபுரம் மற்றும் பூங்கா அமையவுள்ளது. 8 கோடி ரூபாய் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இப்பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
சென்னை அண்ணா நகர் போல் வருகிறது
சென்னையில் உள்ள ராயப்பேட்டை மணிக்கூண்டு அல்லது அண்ணா நகர் டவர் பார்க் போல, தாம்பரத்திற்கெனத் தனித்துவமான பொது அடையாளங்கள் இதுவரை இல்லை என்ற குறையை இது போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பேட்டி
இந்த திட்டம் குறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் எஸ். பாலச்சந்தர் அளித்த பேட்டியில்கூறுகையில், "சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பொது இடங்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்த யோசனையை உருவாக்கினோம். மக்கள் தங்கள் குடும்பத்துடன் ஓய்வெடுக்கவும், பெருமையுடன் இதைக் குறிப்பிடவும் ஒரு இடத்தை உருவாக்க விரும்பினோம்," என்றார். இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், நடைபயிற்சி உள்பட பல்வேறு வசதிகள் இடம்பெற போகிது.
மக்களின் கருத்து என்ன
இந்தத் திட்டத்தை வரவேற்றாலும், குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சில கவலைகளையும் முன்வைத்துள்ளார்கள். பாரதி நகர் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் எம். குமாரவேல் தனியார் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "இது நல்ல முயற்சிதான், ஆனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்றார்.
எளிதாக வர முடியுமா
டி. சங்கர் என்பவர் கூறுகையில், "இந்த இடம் மேற்கு தாம்பரத்தில் இருந்து 10 கி.மீ மற்றும் கிழக்கு தாம்பரத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது. சுமார் 10.7 லட்சம் மக்கள் தொகை கொண்ட தாம்பரத்தில், மக்கள் இந்த இடத்திற்கு எளிதாக வந்து செல்ல முடியுமா என்பதை மாநகராட்சி பரிசீலிக்க வேண்டும்" என கூறினார்.












Click it and Unblock the Notifications