ஆ ராசா சர்ச்சை பேச்சு.. நாளை மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க... தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
சென்னை: தேர்தல் பிரசாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து நாளை மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியைச் சேர்ந்த பல்வேறு முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். அதன்படி முன்னாள் அமைச்சர் ராசாவும் திமுகவிற்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த வாரம் அவர் தேர்தல் பிரசாரத்தின் போது பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதன் காரணமாக ஆ ராசா பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக கடந்த 27ஆம் தேதி புகார் அளித்தது.
தனிமனித விமர்சனம் என்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் இது தொடர்பான அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்குத் தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக ஆ ராசாவுக்கு தேர்தல் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக உரிய விளக்கத்தை நாளை மாலை 6 மணிக்குள் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய விளக்கம் அளிக்கத் தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications