கேளம்பாக்கம் அருகே 35-வது மாடியில் இருந்து குதித்த மாணவன்... பிரபல அடுக்குமாடியில் என்ன நடந்தது?
சென்னை: சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே ஏகாட்டூரில் 40 மாடிகள் கொண்ட பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள 35-வது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பிரபல தொழிற்சாலையில் பணிபுரியும் தென்கொரிய நாட்டைச் சேர்ந்தவரின் மகன் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
சென்னையின் புறநகர் பகுதியான செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த ஏகாட்டூரில் 40 மாடிகள் கொண்ட பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் 35-வது மாடியில் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த யங்கியூ லிம் என்பவர் தனது மனைவி சுஜாங் சிங், மகன் சினோ லிம் (வயது 15) ஆகியோருடன் வசித்து வருகிறார். யங்கியூ லிம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார். யங்கியூ லிம் கடந்த வாரம் தென்கொரியா சென்றுள்ளார். வீட்டில் அவருடைய மனைவி மற்றும் மகன் மட்டும் இருந்துள்ளனர். சினோ லிம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 11.30 மணி வரை சினோ லிம் தனது தாயுடன் பேசிவிட்டு தூங்கச் சென்றிருக்கிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் மாணவன் சினோ லிம் தான் வசிக்கும் 35-வது மாடியில் இருந்து குதித்துள்ளார். சத்தம் கேட்டு காவலாளி சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது சிறுவன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.இது சம்பந்தமாக கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
மாணவன் கொரிய மொழியில் எழுதிய கடிதம் ஒன்றை வீட்டில் போலீசார் கைப்பற்றினர். அதில் பெற்றோர்கள் சரியாக கவனிப்பதில்லை எனவும் தென் கொரியாவில் வசிக்கும் சகோதரியை மட்டும் பாசமாக கவனிக்கின்றனர் என வருத்தத்துடன் எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். பெற்றோர் தன்னை சரியாக கவனிப்பது இல்லை என கூறி பள்ளி மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications