தமிழகத்தில் என்ன நடக்குது..வடமாநிலத்தவர் மீது தாக்குதலா? கிளம்பி வர்றாங்களாம் பீகார் அதிகாரிகள் குழு
வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் என்ற தகவலால் உண்மையை அறிய பீகார் அதிகாரிகள் குழு தமிழகம் வருகிறது
சென்னை: தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வீடியோக்கள் பரவிய நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பீகார் அதிகாரிகள் குழு தமிழ்நாடு வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் இரண்டு வீடியோக்கள் வேகமாக பரவின. இந்த வீடியோவை ஷேர் செய்தவர்கள், "தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள்" என்று தலைப்பிட்டு இருந்தனர். தமிழ்நாட்டில் இவ்வீடியோக்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், வட மாநிலங்களில் குறிப்பாக பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீடியோ சலசலப்பை ஏற்படுத்தியது.
பாஜகவினர் இந்த விவகாரத்தை பீகார் மாநில சட்டமன்றத்தில் பிரச்சினையாக எழுப்பினர். கடந்த இரு நாட்களாக அம்மாநில சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏக்கள் வீடியோ குறித்து 'பீகார் தொழிலாளிகளுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை' என்று குற்றம்சாட்டி அமளியில் ஈடுபட்டனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், 'இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி விளக்கமளித்துள்ளார். இக்குற்றச்சாட்டு உண்மை கிடையாது' என்று கூறியுள்ளார்.

வீடியோ
இந்த வீடியோ தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை, "தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் மற்றும் இந்தி பேசும் மக்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களிலும், பிற ஊடகங்களிலும் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகளின் உண்மை தன்மையை சரிபார்க்காமல் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது முழுக்க முழுக்க வதந்தியாகும். எனவே தயவு செய்து இதுபோன்ற வதந்திகளை நம்பி பரப்ப வேண்டாம். இவ்வாறு இரண்டு வீடியோக்கள் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒன்று திருப்பூரில் பீகார் தொழிலாளர்களுக்கும், ஜார்கண்ட் தொழிலாளர்களுக்கும் இடையே நடந்த மோதல்.

இந்தியில் ட்வீட்
மற்றொரு வீடியோ, கோவையில் உள்ளூர் மக்கள் மோதிக்கொண்ட சம்பவம். எனவே தமிழர்களால் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக கூறும் தகவலில் உண்மையில்லை. ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் சட்டம் ஒழுங்கை திறம்பட செயல்படுத்தும் மிகவும் அமைதியான மற்றும் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இந்த வீடியோக்களின் தகவல்கள் தவறானவை . எனவே இதுபோன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீறும் பட்சத்தில் அவர்கள் மீறு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று இந்தியில் ட்வீட் செய்திருந்தது. தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவும் இதே கருத்தைதான் கூறினார்.

விளக்கம்
இருப்பினும் பீகார் பாஜக எம்எல்ஏக்கள் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து இரண்டாவது நாளாக தொடர் அமளியில் ஈடுபட்டனர். மேலும், தமிழ்நாட்டுக்கு பீகார் அதிகாரிகள் கொண்ட உண்மை அறியும் குழு அனுப்பப்பட வேண்டும் என்றும் கூறினர். தொடர் அமளி காரணமாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து தமிழ்நாட்டுக்கு பீகார் காவல்துறை அதிகாரிகள் சனிக்கிழமையன்று செல்வார்கள் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நான்கு பேர் கொண்ட இக்குழு பாஜகவின் குற்றச்சாட்டு குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.

உண்மையறியும் குழு
முன்னதாக மார்ச் 1ம் தேதியன்று சென்னையில் நடந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றிருந்தார். இதனை குறிப்பிட்டு பீகார் அரசு தமிழ்நாட்டுக்கு துணை போகிறது எனவும் பாஜகவினர் விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications