ஜூன் 14 வரை.. ஆதார் தகவல்களை இலவசமாக அப்டேட் செய்யலாம்.. UIDAI சொன்ன குட் நியூஸ்..ஆனால் ஒரு கண்டிஷன்
அடுத்த 3 மாதங்களுக்கு ஆதார் கார்டு விவரங்களை இணையதளம் மூலமாக இலவசமாக புதுப்பிக்கலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI அறிவித்துள்ளது.
சென்னை: அடுத்த 3 மாதங்களுக்கு அதாவது ஆதார் கார்டு விவரங்களை இணையதளம் மூலமாக இலவசமாக புதுப்பிக்கலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI அறிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் தெரிவித்து இருந்த நிலையில், இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
அரசின் எந்த ஒரு நலத்திட்டங்கள் என்றாலும் சரி முதலில் 12 இலக்கங்களை கொண்ட ஆதார் எண்ணேயே அரசு அதிகாரிகள் கேட்கிறார்கள்.

ஆதார் கார்டு
இதற்கு மட்டும் அன்றி செல்போன் சிம் கார்டு வாங்குவதில் தொடங்கி சில தனியார் நிறுவனங்கள் கூட ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதார் விவரங்களையே கோருகின்றன. ஆதார் அட்டையை பொறுத்தவரை ஒருவரின் கைரேகைகள் மற்றும் கருவிழி அடையாளங்களும் எடுக்கப்படுவதால் போலிகளை எளிதில் அடையாளம் கண்டு சம்பந்தப்பட்ட நபரின் அடையாளத்தை கிட்டத்தட்ட 100 சதவீதம் உறுதி செய்து விட முடியும்.

மாற்றம் செய்ய வேண்டியிருந்தால்
இதனால், பயனாளிகளுக்கு சரியான வகையில் நலத்திட்டங்கள் சென்றடவைதை ஆதார் உறுதி செய்வதால் ஆதார் எண்ணின் பயன்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆதார் அட்டைகளில் முகவரி மாற்றமோ அல்லது மொபைல் போன் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் ஆதார் அப்டேஷன் மையத்தில் சென்று நேரடியாகவே செய்ய முடியும். சில வங்கிகள், தபால் நிலையங்களில் கூட இந்த சேவை அளிக்கப்படுகிறது.

கட்டணமின்றி புதுப்பிக்க முடியும்
எந்தெந்த வங்கிகளில் இந்த சேவை அளிக்கபடும் என்ற விவரத்தையும் ஆதார் அடையாள ஆணையம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், மை ஆதார் மூலமாகவும் அப்டேட் செய்து கொள்ளலாம். எனினும் இந்த அப்டேஷன்களுக்கு ரூ. 25 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த நிலையில் ஆதாா் தகவல்களை வரும் ஜூன் 14-ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக கட்டணமின்றி புதுப்பிக்க முடியும் என இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் (UAIDAI) தெரிவித்துள்ளது.

ஜூன் 14 ஆம் தேதி வரை
இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "பொதுமக்கள் தங்கள் ஆதார் தகவல்களை மை ஆதார் வெப்சைட் பக்கத்தின் மூலமாக மார்ச் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை இலவசமான முறையில் புதுப்பித்துக் கொள்ள முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆதாா் சேவை மையங்களில் மேற்கொள்ளப்படும் அப்டேட்களுக்கு வழக்கத்தில் உள்ள கட்டணமான ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும் என்பதில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவசமாக அப்டேட் செய்துகொள்ள..
ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் தகவல்களை புதுப்பிப்பது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், தற்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளும் வசதியை செய்துள்ளது. இதன்படி, மக்கள் https://myaadhaar.uidai.gov.in/எனும் இணையத்தில் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஒடிபி நம்பர் மூலமாக தங்களின் தரவுகளை புதுப்பித்துக்கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications