வீடு, நிலம் வாங்க சூப்பரான நாள்.. செப்., 4ஆம் தேதியை மறக்காதீங்க! பத்திரப்பதிவுத் துறை முக்கிய தகவல்
சென்னை: ஆவணி மாதத்தின் கடைசி வளர்பிறை முகூர்த்தம் நான்காம் தேதி நடக்க இருக்கிறது. இந்த நிலையில் அன்றைய தினம் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் (டோக்கன்கள்) ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை அறிவித்துள்ளது.
ஆடி மாதம் நிறைவடைந்து இருக்கும் நிலையில் ஆவணி மாதம் பிறந்திருக்கிறது. கடந்த வாரம் இரண்டு சுப முகூர்த்தங்கள் முடிந்த நிலையில் வளர்பிறையில் கடைசி முகூர்த்தமான நான்காம் தேதி ஏராளமான திருமண நிகழ்வுகள், சுப நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
அதுமட்டுமின்றி வீடு, நிலம் உள்ளிட்டவற்றை வாங்கப் பத்திரப்பதிவு செய்ய சுப முகூர்த்த நாளைத்தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். காரணம் சுப காரியங்கள் அனைத்தையும் முகூர்த்த தினங்களில் செய்வதால் வாங்கும் சொத்துகள் பல மடங்காகப் பெருகும் என்பது மக்கள் நம்பிக்கை.

ஆவணி மாதம் முகூர்த்தம்
அட்வான்ஸ் கொடுப்பது தொடங்கி பத்திரப்பதிவு செய்வது வரை வீடு, நிலம் ஆகியவை முகூர்த்த தினங்களிலேயே நடக்கும். இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டம் இருக்கும். இதனால் பல நேரங்களில் குறிப்பிட்ட முகூர்த்த தினங்களில் நிலங்களைப் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மக்கள் அவதி அடைந்தனர். இந்த நிலையில் பத்திரப்பதிவுத் துறை சார்பில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சுபமுகூர்த்த பதிவு
கடந்த வாரம் ஆவணி முகூர்த்தம் வந்த நிலையில் அதிக அளவு பத்திரப்பதிவு நடந்தது. இரண்டு நாட்கள் முகூர்த்தம் காரணமாகப் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் அரசுக்கும் அதிக அளவிலான வருவாய் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்தம் வரும் என்பதால் ஏராளமானோர் பத்திரப்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசல் மற்றும் பத்திரப்பதிவு தாமதமாவதைத் தடுக்கும் வகையில் கூடுதலாக முன்பதிவு வில்லைகளை (டோக்கன்களை) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வளர்பிறை முகூர்த்தம்
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "ஆவணி மாதத்தின் கடைசி வளர்பிறை முகூர்த்தம் நான்காம் தேதி நடக்க இருக்கிறது. இந்த நிலையில், அன்றைய தினம் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
பதிவுத்துறை அறிவிப்பு
சுபமுகூர்த்த தினங்கள் எனக் கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான 04.09.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
கூடுதல் டோக்கன்கள்
எனவே, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான 04.09.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு, ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications