தெய்வமே.. உங்களுக்கு இப்பவாவது கேட்டுச்சே.. ரயிலில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு பிறக்குது விடிவு
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஹவுரா சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் பல ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் சாதாரண பயணிகள் பயணிக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வரை சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதுமே சமீப காலமாக முன்பதிவு ரயில்களில் அன்ரிசர்வ்டு பயணிகள் ஆக்கிரமிப்பது அதிகரித்துள்ளது. ஸ்லீப்பர் பெட்டிகளை மட்டுமின்றி, ஏசி இரண்டாம் வகுப்பு, 3ம் வகுப்பு பெட்டிகளை ஆக்கிரமிக்கும் வீடியோக்கள் வெளியாகின. இதேபோல் தென்னிந்தியாவில் இருந்து வட மாநிலங்கள் செல்லும் ரயில்களிலும், வட மாநிலங்களில் இருந்து தென் மாநிலங்கள் செல்லும் ரயில்களிலும் முன்பதிவு செய்யாத பயணிகள், முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறிக்கொண்டு, அங்கு ஏற்கனவே புக்கிங் செய்த பயணிகளுக்கு இடம் தராமல் கழிவறை வரை அமருவதும் தொடர்கிறது. வந்தே பாரத் ரயிலைக்கூட விட்டுவைக்காமல் அதிலும் முன்பதிவு செய்யாத பயணிகள் ஆக்கிரமித்தனர். கடந்த சில மாதங்களில் இந்த சம்பவங்கள் மிக அதிக அளவு நடந்துள்ளது.

எப்போதுமே தமிழ்நாட்டில் முன்பதிவு செய்த பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் ஆக்கிரமிக்க முடியாது. அப்படி பயணித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஹவுரா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு முன்பதிவு பெட்டியில் முன்பதிவு அல்லாத சாதாரண டிக்கெட்டுகள் வைத்திருந்த ஏராளமான வடமாநில பயணிகள் ஏறிவிட்டார்கள். முன்பதிவு செய்த பயணிகள் குறிப்பிட்ட அந்த முன்பதிவு பெட்டியில் ஏற முடியாத அளவுக்கு வாசலில் முண்டியடித்தபடி அவர்கள் நின்றுவிட்டார்கள். இதன்காரணமாக அந்த பெட்டியில் பயணம் செய்ய வேண்டிய முன்பதிவு பயணிகள் ரயிலில் ஏற முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக பல பயணிகள் தங்களது பயணத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்பி தயாநிதி மாறன் உள்பட பலர் குரல் எழுப்பினர். இந்த விவகாரத்தில் தெற்கு ரயில்வே சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்தது.
சென்னை சென்ட்ரல் ரயிலில் நடந்த சம்பவம் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வரை போனது.. இதைத்தொடர்ந்து, நடந்த சம்பவம் குறித்து தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் அஷ்வினி வைஷ்ணவ் கேட்டறிந்தார். தொடர்ந்து அனைத்து கோட்ட ரயில்வே பொது மேலாளர்களுடன் அவர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அப்போது ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், முன்பதிவு பெட்டியில் சாதாரண பயணிகள் பயணம் செய்வதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினாராம். மேலும் முன்பதிவு பெட்டிகளில் எந்தவித சிரமமும் இல்லாமல் முன்பதிவு செய்த பயணிகள் பயணம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் ரயில்வே அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் எந்தெந்த ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் சாதாரண பயணிகள் அதிகம் பயணம் செய்கிறார்கள் என்பதை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டதாகவும், அந்த ரயில்களில் எல்லாம் கூடுதல் டிடிஆர்கள், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாராம்.
அதேபோல் முன்பதிவு பெட்டிகளில் சாதாரண பயணிகள் பயணம் செய்யும்பட்சத்தில், அவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்த நிறுத்தத்தில் அவர்களை ரயிலில் இருந்து இறக்கி விட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் ஜெனரல் கோச் டிக்கெட் எடுத்தவர்கள், வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்துள்ளர்களை எக்காரணத்தை கொண்டும் முன்பதிவு பெட்டிகளில் ஏறக்கூடாது என்பதை ரயில் புறப்படும் இடங்களில் தொடர்ந்து விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications