நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை.. விடாமுயற்சிக்கு உந்து சக்தி.. நடிகர் அஜித் குமார் நெகிழ்ச்சி!
சென்னை: நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸ் அணியினர் துபாயில் நடைபெற்ற 24ஹெச் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொண்டு மூன்றாம் இடம்பிடித்தனர். இந்நிலையில், நன்றியும், பொங்கல் வாழ்த்தும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அஜித்.
பைக் மற்றும் கார் ரேஸில் மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் குமார் துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு 3வது இடம் பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ளார். 24ஹெச் சீரிஸ் தொடரில் அஜித் குமார் தலைமையிலான அணி கலந்து கொண்டு 991 பிரிவில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தது.

தனது கனவான கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அஜித் குமார் தனக்கு இதைவிட பெரிய சந்தோஷம் என்று எதுவும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மகிழ்ச்சியின் உச்சத்தில் இந்திய தேசிய கொடியை கையில் வைத்துக் கொண்டு துள்ளிக் குதித்து வெற்றியை கொண்டாடினார்.
இந்த வெற்றியை தனது குடும்பத்தோடு உற்சாகமாக கொண்டாடினார் அஜித் குமார். இதையடுத்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் அஜித்துக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், கார்த்திக் சுப்புராஜ், ஆதிக் ரவிச்சந்திரன், விஜய் வசந்த், விக்ரம் பிரபு என்று பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்தநிலையில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.
இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications