கொரோனா பாதிப்பில் இருந்து நடிகர் கமல்ஹாசன் குணமடைந்தார்- மீண்டும் பிக்பாஸ்-5 தொகுத்து வழங்குகிறார்!
சென்னை: கொரோனா பாதிப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் குணமடைந்துள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கமல்ஹாசன் அண்மையில் ஹவுஸ் ஆஃப் கத்தர் என்ற தனது ஃபேஷன் பிராண்டை தொடங்க அமெரிக்கா சென்றார். சிகாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பி இருந்தார். அவருக்கு சளி, இருமல் தொடர்ந்து இருந்தது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆகிட்டாரா?.. வைரலாகும் புகைப்படம்.. உண்மை என்ன?
கமல்ஹாசனுக்கு கொரோனா
இதனையடுத்து மருத்துவமனையில் கமல்ஹாசன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில், அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதி
இதனால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல்ஹாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது தமது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார் கமல்ஹாசன்.
பிக்பாஸில் மாற்றம்
கமல்ஹாசன் நலம் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் தெரிவித்திருந்தனர். மேலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ்-5 நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்காலிகமாக தொகுத்து அளித்து வந்தார். இதனிடையே கமல்ஹாசன் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதாக ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என தெரியவந்தது. அத்துடன் ஓரிருநாட்களில் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் எனவும் கூறப்பட்டது.
கமல்ஹாசன் குணமடைந்தார்
இந்நிலையில் இன்று ராமச்சந்திரா மருத்துவமனை கமல்ஹாசன் உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், லேசான கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் முழுமையாக குணமடைந்துவிட்டார். நாளை மறுநாள் (டிசம்பர் 3) வரை தனிமைப்படுத்தப்பட்டு ஓய்வில் இருப்பார்; டிசம்பர் 4-ந் தேதி முதல் வழக்கமான பணிகளில் கமல்ஹாசன் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமச்சந்திரா மருத்துவமனையின் அறிக்கையால் கமல்ஹாசன் ரசிகர்கள், மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் எனவும் தெரிகிறது.