கேளம்பாக்கம் டூ சாலிகிராமம்! அதிகாலை 4 மணிக்கு பசி.. இட்லி சாப்பிட்ட மயில்சாமி.. நடந்தது என்ன?
நடிகர் மயில்சாமிக்கு ஏற்கெனவே இரு முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சிவராத்திரியை முன்னிட்டு அதிகாலை சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலில் இருந்து சாலிகிராமம் வீட்டிற்கு வந்த மயில்சாமி பசிக்கிறது என கூறி இட்லி சாப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் முக்கிய கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் மயில்சாமி. இவர் காமெடியிலும் கலக்கியுள்ளார். மிமிக்ரி ஆர்டிஸ்டும் கூட!, இவர் பிரபலங்களை போல் மட்டுமல்லாமல் மிருகங்கள், பறவைகள், இசைக் கருவி உள்ளிட்டவைகளின் சப்தத்தையும் மிமிக்ரி செய்யும் திறமை படைத்தவர்.
அடித்தட்டு வாழ்க்கையில் இருந்து பெரிய அளவுக்கு உயர்ந்தார். இதனால் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை அவர் செய்து வருகிறார். உணவு என கேட்டு யார் வந்தாலும் இல்லை என சொல்லும் பழக்கம் மயில்சாமிக்கு இல்லை.

இதய அறுவை சிகிச்சை
சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனினும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். தீவிர சிவ பக்தரான மயில்சாமி சிவராத்திரியையொட்டி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு சிவராத்திரி பூஜையில் டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து கலந்து கொண்டார்.

4 மணிக்கு இட்லி
அதிகாலை 3.30 மணிக்கு மேகநாதேஸ்வரர் கோயிலில் இருந்து தனது சாலிகிராமம் இல்லத்திற்கு திரும்பியுள்ளார். அதிகாலை 4 மணிக்கு அவருக்கு பசி எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் இட்லி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சென்னை சாலிகிராம வீடு
அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர் அரசியல் கட்சியினர், ரசிகர்கள், நண்பர்கள் என அஞ்சலி செலுத்தினர். இவரது உடலுக்கு இன்றைய தினம் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது. மயில்சாமிக்கு இரண்டு முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் நடந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் இரவு முழுவதும் கண் விழித்து இசை கச்சேரியில் கலந்து கொண்டது மீண்டும் மாரடைப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.

எம்ஜிஆரின் தீவிர ரசிகர்
இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். எம்ஜிஆர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே கையில் இருக்கும் பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கும் குணம் படைத்தவர். அவரை போல மயில்சாமியும் அரசியலில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தாலும் எந்த கட்சிக்கும் தொண்டராக செல்ல விருப்பமில்லாமல் தனது தொகுதி மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தார். விருகம்பாக்கம், சாலிகிராம் பகுதிகளில் பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார். நடிகராக நகைச்சுவை குணம் கொண்ட மயில்சாமி சினிமாவை மிகவும் நேசித்தார். ஒரு படத்தில் எந்த ரோல் கொடுத்தாலும் எந்த அளவுக்கு சிறிய கேரக்டர் கொடுத்தாலும் அதை மனதார ஏற்று 100 சதவீதம் நடிப்பில் வெளிப்படுத்துவார். யாரிடமும் கோபமாகவோ சிடுசிடுவென்றோ பேச தெரியாதவர். அனைவரிடத்திலும் அன்பை மட்டுமே விதைத்தார். அவர் எந்த அளவுக்கு நன்மை செய்தார் என்பதை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த அலைகடலென திரண்டு வருவோரை பார்த்தாலே தெரிகிறது. சினிமாவும் நகைச்சுவையும் இருக்கும் வரை மயில்சாமி என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.












Click it and Unblock the Notifications