எம்ஜிஆரின் தீவிர பக்தன்.. ஆனாலும் அதிமுகவை மயில்சாமி ஆதரிக்கவில்லை.. என்ன காரணம்?.. பிளாஷ்பேக்!
எம்ஜிஆர் பக்தனான மயில்சாமி ஏன் அதிமுகவை ஆதரிக்கவில்லை தெரியுமா?
சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதாவை மிகவும் பிடிக்கும், ஆனாலும் அதிமுகவை மயில்சாமி ஏன் ஆதரிக்கவில்லை தெரியுமா?
நடிகர் மயில்சாமி நேற்று முன் தினம் இரவு முழுவதும் கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலில் சிவராத்திரியையொட்டி வழிபாடு நடத்தினார். இதையடுத்து அவர் நேற்று அதிகாலை தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இதையடுத்து மயில்சாமியின் உடல் அவரது சாலிகிராமம் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

வடபழனி
அவரது உடல் இன்றைய தினம் வடபழனி விபிஎன் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் மயில்சாமி குறித்து நிறைய பேர் தங்களது அனுபவங்களை கூறிவருகிறார்கள். ஏற்கெனவே மயில்சாமி குறித்து விவேக் கூறிய கருத்துகள் வைரலாகி வருகிறது. ஒரு விழாவில் விவேக் கூறுகையில், நடிகர் மயில்சாமி ஒரு நாள் தனக்கு கிடைத்த சம்பளம் முழுவதையும் ஏழை மக்களுக்கு கொடுத்துவிட்டார்.

10 ஆயிரம் ஊதியம்
பின்னர் என்னிடம் வந்து ஆட்டோவுக்கு காசு கேட்டார். இப்படித்தான் அவர் ரூ 10 ஆயிரம் ஊதியம் வாங்கினாலும் அதில் ஒரு பைசாவை கூட தனக்கென எடுத்து வைத்துக் கொள்ளாமல் பிறர் நலனுக்கு கொடுத்துவிடுவார். மயில்சாமி சீரடி சாய்பாபா மாதிரி, ஒரு பணக்காரனாக இருப்பார், இன்னொரு நாள் பிச்சைக்காரனாக இருப்பார். அவர் பிச்சைக்காரனாவது அவராலேயேதான். எப்போதும் ஹெல்ப் ஹெல்ப் ஹெல்ப் என சொல்வார். தனக்கு கிடைத்ததை பிறருக்கு உதவ வேண்டும் என்பார். இவ்வாறு விவேக் தெரிவித்திருந்தார்.

எம்ஜிஆர் பக்தன்
அது போல் மயில்சாமி தீவிர முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பக்தன். அவர் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தினந்தோறும் புதிய மாலையை அணிவிப்பார். எம்ஜிஆர் மீதான பற்றின் காரணமாக அதிமுகவில் இணைந்து நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார். அது போல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதும் அதீத பற்றுக் கொண்டவர். இவர்கள் இருவருக்காக அதிமுகவில் உழைத்த மயில்சாமி, ஜெயலலிதா இறந்த பிறகு அந்த கட்சியில் இருந்து ஒதுங்கி கொண்டார்.

விருகம்பாக்கத்தில் சுயேச்சையாக போட்டியிட்டவர்
இதையடுத்து அவர் 2021 ஆம் ஆண்டு விருகம்பாக்கத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவர் நினைத்திருந்தால் எந்த கட்சியிலாவது இணைந்து எம்எல்ஏ ஆகியிருக்க முடியும். ஆனால் அவர் அதை விரும்பவில்லை. தனித்து போட்டி ஏன் என்ற கேள்விக்கு மயில்சாமி கூறிய பதில் தற்போது வைரலாகி வருகிறது.

ஜெயலலிதா காப்பாற்றிய அதிமுக
அவர் கூறியிருப்பதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய அதிமுக தற்போது இல்லை. அந்த கட்சி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது எனக்கு மட்டுமில்லை, அதிமுக தொண்டர்கள் பலருக்கும் வேதனையாக இருக்கிறது. ஜெயலலிதா நற்பெயரை எப்படி வாங்கினார் தெரியுமா? ஜெயலலிதா அதிமுகவை கட்டி காப்பாற்றிய போது கடைசி தொண்டனுக்கு எம்எல்ஏ சீட் கிடைக்கும், அமைச்சராகலாம்.

ஹிந்தி வேண்டாம்
ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை. தேசிய கட்சி என் மாநிலத்தை ஆள கூடாது, இந்தி பேசக் கூடியவர்கள் எங்களை ஆள வரக் கூடாது, 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தி வேண்டாம் என போராடினோம். கடந்த 4 ஆண்டுகளாக நடந்த எதுவுமே சரியில்லை. இதனால்தான் விருகம்பாக்கம் தொகுதியில் நான் சுயேச்சையாக போட்டியிட்டேன். என்னை போல கட்சிக்காரர்களுக்கே அதிருப்தி இருக்கிறது. பாஜகவிற்கு பினாமி போல் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது என கடுமையாக விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications