நடிகர் சத்யராஜ் மகள்.. திவ்யாவுக்கு பறந்து வந்த வாழ்த்து.. "விடியல் பிறக்கட்டும்"..அட யாருனு பாருங்க
நடிகர் சத்யராஜின் மகள் டாக்டர் திவ்யாவுக்கு மூத்த தலைவர் பழ நெடுமாறன் வாழ்த்து தெரிவித்துள்ளார்
சென்னை: திவ்யாவின் தொண்டு பெருகட்டும்.. ஈழத் தமிழர் வாழ்வில் விடியல் பிறக்கட்டும்.. என்று சத்யராஜ் மகள் டாக்டர் திவ்யாவுக்கு, மூத்த தலைவர் பழ.நெடுமாறன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா பிரபலமான டாக்டர் ஆவார்.. ஊட்டச்சத்து மருத்துவராக உள்ளார்... உடல்நலம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஏராளமான வீடியோக்கள், கட்டுரைகளை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.
காலாவதியான மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஏராளமான உடல்உபாதைகள் ஏற்படுவதாக கூறி, சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து, வீடியோ ஒன்றையும் திவ்யா பதிவிட்டிருந்தார்..

பால் பவுடர்
அதில், "மக்கள்தான் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அவர்கள் வாங்கும் அனைத்து மளிகை பொருட்கள், மருந்துகள் என எல்லாவற்றிலும் காலாவதி தேதியை பார்த்த பிறகு வாங்க வேண்டும். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு வாங்க கூடிய சிரப், கிரீம், ஷாம்பு, பால் பவுடர் என எது வாங்கினாலும் காலாவதி தேதியை பார்த்து வாங்குவது மிக மிக முக்கியமானது. எந்த துறையிலும் தவறுகள் நடக்க கூடாது அதிலும் மருத்துவ துறையில் தவறுகள் நடந்தால் அது அது மனிதனின் உடல்நலத்திற்கும் உயிருக்கும் ஆபத்து..

மருந்து கடைகள்
மருந்து கடைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். மக்கள் அனைவருமே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தான் மருந்து வாங்குகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் உடல் சார்ந்த பிரச்னையை அந்த மருந்து குணப்படுத்தும் எனும் நம்பிக்கையில்தான் வாங்குகிறார்கள். பணத்தை சம்பாதிப்பதற்காக அவர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றுவது மனிதநேயம் இல்லாத ஒரு செயல். பணத்தை விடவும் மனிதநேயம் தான் முக்கியம்.. மக்களை ஏமாற்றுவதை முதலில் நிறுத்துங்கள்" என்பதுடன் இன்னும் பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தார்..

பசுமை பள்ளி
ஒருபக்கம் மருத்துவத்துறையில் ஈடுபாடு என்றாலும், மறுபக்கம் ஈழத்தமிழர் நலனுக்காகவும் பாடுபட்டு வருகிறார் திவ்யா. கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் சத்யராஜ், தன் மகளின் செயல்பாடுகள் குறித்து பூரித்து போய் சொல்லியிருந்தார். அதை பற்றி ஒரு அறிக்கையே பிரத்யேகமாக வெளியிட்டிருந்தார். அதில், "இலங்கை நாட்டில் வடக்கு மாகாண பகுதியில் நெடுந்தீவு பசுமை பள்ளி, வடக்கு பசுமை சமுதாயம் என்கிற பெயரில் என் மகள் திவ்யாவும் ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் செல்வாவின் பேத்தி பூங்கோதை சந்திரகாசனும் இணைந்து ஒரு அற்புதமான திட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.

நல்ல பிள்ளை
இது அங்குள்ள மக்களுக்கு உதவியாக இருக்கும். ஈழத் தமிழர்களுக்காக என் மகள் தொடர்ந்து தொண்டாற்றுவார்" என்று ஒரு அறிக்கை வெளியிட்டு குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்தநேரத்தில், எம்.ஜி.ஆரின், நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி, சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது என்றும் மகிழ்ந்து பதிவு செய்திருந்தார்.. சத்யராஜின் இந்த அறிக்கைக்கு, மூத்த தலைவர் பழ.நெடுமாறன் வாழ்த்து தெரிவித்துள்ளார்..

பசுமை தாயகம்
இது தொடர்பாக அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், "ஈழத் தமிழர் நலனுக்காக என் மகள் தொடர்ந்து தொண்டாற்றுவார் என்று தாங்கள் வெளியிட்ட அறிக்கையை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கையில் உள்ள நெடுந்தீவில் பசுமை பள்ளி பசுமை சமுதாயம் என்ற அமைப்புகளின் மூலம் ஈழத் தமிழர் குழந்தைகளுக்கு தொண்டாற்றி வரும் ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் தந்தை செல்வாவின் பேத்தி பூங்கோதை சந்திர காசன் உடன் இணைந்து தங்களின் அருமை புதல்வி திவ்யா தொண்டாற்றி வருவதை அறிந்து மிக மகிழ்ந்தேன்.

மகிழ்ச்சி
தாங்கள் தங்கள் மகள் திவ்யா ஈழத்தமிழர்களுக்கு ஆற்றி வரும் தொண்டினை அறிந்து பெற்ற தந்தை என்ற முறையில் மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள் என்பது இயற்கையே. உங்களுக்கு பெருமையை பெற்று தருவது தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. திவ்யாவின் தொண்டு பெருகட்டும் ஈழத் தமிழர் வாழ்வில் விடியல் பிறக்கட்டும். தங்களுக்கும் தங்கள் மகளுக்கும் என் பாராட்டும் வாழ்த்துக்களும்" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications