"நான் ஸ்ரீகாந்தின் சித்தப்பாவா? என்னை பிடிச்சி ஜெயில்ல போடணுமா?" பதறிய வலைப்பேச்சு அந்தணன்
சென்னை: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்துக்கு வலைப்பேச்சு அந்தணன் சித்தப்பா என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலுக்கு அந்தணன் விளக்கம் அளித்துள்ளார்.
எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். அவரது உறவினர்கள் அனைவரும் நன்கு படித்து பெரிய பதவிகளில் இருக்கும் நிலையில், ஸ்ரீகாந்துக்கு மட்டும் சினிமாவில் நடிக்க அத்தனை ஆர்வம். இதனால் பெற்றோரின் விருப்பமின்றி "ரோஜா கூட்டம்" படத்தில் அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற "ஆப்பிள் பெண்ணே நீ யாரோ" பாடல் மூலம் ரசிகைகளின் மனதில் இடம்பிடித்தார். அன்றிலிருந்து ஸ்ரீகாந்த் அனைவராலும் அறியப்பட்டார்.

இதையடுத்து அவரைத் தேடிப் பல தயாரிப்பாளர்கள் சென்றனர். அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த நிலையில், அவருடைய சித்தப்பா ஒருவர்தான் ஸ்ரீகாந்தின் ஊதிய விவகாரம், கதை கேட்பது, கால்ஷீட் ஒதுக்குவது போன்ற விஷயங்களைக் கவனித்து வந்தாராம்.
இந்தச் சூழலில், ஸ்ரீகாந்தின் சித்தப்பா வலைப்பேச்சு அந்தணன்தான் என ஒரு தகவல் பரவியது. முக்கியமாக, "சித்தப்பா அந்தணனைப் பிடித்து ஜெயிலில் போடுங்க சார்" என்றெல்லாம் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தணன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "நான்தான் ஸ்ரீகாந்தின் சித்தப்பா, என்னைப் பிடித்து உள்ளே போட்டு விசாரிங்கன்னுலாம் நிறைய பேர் சொல்றாங்க. நான் அவருடைய சித்தப்பா இல்லை. அவர் வேறு சமூகம், நான் வேறு சமூகம். நானும் அவரும் பேசியே 20 ஆண்டுகள் ஆகிவிட்டது" எனத் தெரிவித்துள்ளார். இந்த விளக்கம் தற்போது வைரலாகி வருகிறது. எனினும், இது பொய் என ஒரு சாரார் ஏற்க மறுத்து மீண்டும் இந்தத் தகவலைப் பரப்பி வருகிறார்கள். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனுக்கள்
கொக்கைன் போதைப்பொருளைப் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடிகர் ஸ்ரீகாந்தை நாளை (ஜூலை 7ஆம் தேதி) வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதுபோல், இதே வழக்கில் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரும் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார்.
ரத்த மாதிரிகள்
போதைப்பொருளை தான் பயன்படுத்தியது ரத்த மாதிரிகளில் உறுதி செய்யப்படவில்லை என்பதால் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என நடிகர் கிருஷ்ணாவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதும் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
வழக்கு விவரங்கள்
கடந்த ஜூன் 24ஆம் தேதி யாரும் எதிர்பாராத நேரத்தில் போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் முதலில் பயன்படுத்தவில்லை என மறுத்தார். பிறகு அவருக்கு ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டதில் அவர் கொக்கைனைப் பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. இதுவரை ரூ. 4.72 லட்சத்திற்கு கொக்கைனை ஸ்ரீகாந்த் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்துதான் அவர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணா விவகாரம்
அதுபோல், கிருஷ்ணாவின் வழக்கைப் பொறுத்தவரை, அவருடைய ரத்த மாதிரியில் கொக்கைன் போதைப்பொருளைப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இல்லை. அவருடைய இதயம் படபடப்பாக இருக்கும் என்பதால் போதைப்பொருளைத் தான் எடுத்துக்கொள்ள முடியாது என கிருஷ்ணா தெரிவித்தார். ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டு போதைக் கும்பலுடன் கிருஷ்ணாவுக்குத் தொடர்பிருந்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், கிருஷ்ணா வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, அதில் அவர் "கோட் வேர்டில்" உரையாடியிருக்கிறாராம்.
ஜாமீன் கிடைக்குமா
இந்த நிலையில், மேலும் சில நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர் உள்ளிட்டோர் சிக்குவர் எனச் சொல்லப்படுகிறது. இருவருக்கும் ஜாமீன் கிடைக்குமா இல்லையா என்பது நாளை தெரியவரும்.












Click it and Unblock the Notifications