"கேவலமான மனிதர்கள்.." அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! திரிஷா திட்டவட்டம்
சென்னை: தன்னை பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகை திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாஜி நிர்வாகி ஒருவர் பேசிய வீடியோ ஒன்று மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. அந்த பேட்டியில் அந்த அதிமுக மாஜி நிர்வாகி திரிஷா குறித்து அவதூறு கருத்துகளைக் கூறியிருந்தார்.

அவரது இந்த பேச்சு இணையத்தில் மிக வேகமாகப் பரவியது. அதைத் தொடர்ந்து இணையத்தில் நடிகை திரிஷா தொடர்ப்புபடுத்தி பல்வேறு அவதூறு கருத்துகள் பரவின.
நடிகர்கள் கண்டனம்: அதற்கு திரைத்துறையில் இருந்து இயக்குநர் சேரன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல நடிகர் மன்சூர் அலிகான் கூட, "திரைத்துறை சகோதரிகளை அரசியல் போர்வையில் விமர்சித்திருப்பது மனதை நோக செய்கிறது. நடிகைகள் குறித்து அவதூறாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும். போகிற போக்கில் நடிகைகளைக் கீழ்த்தரமாக விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது" என்று கூறியிருந்தார்.

மேலும், பல்வேறு தரப்பினரும் திரிஷாவுக்கு ஆதரவாக இணையத்தில் குரல் கொடுத்து வந்தனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக நடிகை திரிஷா முதல் முறையாகக் கருத்து கூறி இருக்கிறார் இணையத்தில் தன்னை பற்றிப் பரவும் அவதூறு கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திரிஷா, இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
திரிஷா: இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் மீது உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் சொல்ல வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய அனைத்தையும் எனது சட்ட வல்லுநர்கள் மேற்கொள்வார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications