சர்க்கார் பட பாணியில் துபாயிலிருந்து சென்னைக்கு வந்தார் நடிகர் விஜய்! நீலாங்கரையில் வாக்களித்தார்!
சென்னை: GOAT பட ஷூட்டிங்கிற்காக துபாய் சென்ற நடிகர் விஜய், அங்கு பெய்து வரும் தொடர் மழை காரணமாக தமிழகத்திற்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டதால், அவர் இன்று வாக்களிக்க வருவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் அவர் சென்னைக்கு வந்து தனது வாக்கையும் பதிவு செய்துவிட்டார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முதல் கட்டமாக இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம்.

தமிழகத்தில் மொத்தம் வாக்காளர்கள் 6.23 கோடி பேர் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் உள்ளனர். அது போல் சிவிஜில் செயல் மூலம் 4,861 புகார்கள் வந்தன. அவற்றில் 22 புகார்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. மற்றவை தீர்வு காணப்பட்டன.
தமிழகத்தில் இன்று நடைபெறும் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு பாதுகாப்பு பணியில் 1.3 லட்சம் காவலர்கள் ஈடுபடுத்தப்படுவர். தமிழகத்தில் 68,321 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 8050, மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 183 கண்டறியப்பட்டுள்ளன.
இந்த தேர்தலுக்கு மொத்தம் 1.58 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை முதலே நடிகர்கள், அரசியல்வாதிகள் என வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். முதல் ஆளாக அஜித் காலை 7 மணிக்கெல்லாம் வந்து வாக்களித்துவிட்டார். அது போல் சிவகார்த்திகேயன், நடிகர் கார்த்திக், நடிகர் கவுதம் கார்த்திக், ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் வாக்களித்தனர்.
அது போல் எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த், அவருடைய மகனும் விருதுநகர் தேமுதிக வேட்பாளருமான விஜய பிரபாகரன், பாஜக வேட்பாளர் ராதிகா, அவருடைய கணவரும் முன்னாள் எம்எல்ஏவுமான சரத்குமார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநரும் தென் சென்னை வேட்பாளருமான தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இவருடைய கட்சி இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். தனது திரைப்படங்களில் ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட அரசியல் குறித்து பேசி வரும் விஜய், கடந்த சட்டசபைத் தேர்தலில் தனது வீட்டிலிருந்து நீலாங்கரைக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார்.
அவர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அவ்வாறு வந்ததாக தகவல்கள் பரவின. ஆனால் அதை விஜய் தரப்பு மறுத்தது. இந்த முறை லோக்சபா தேர்தலில் அரசியல்வாதியாகவே ஆகிவிட்ட விஜய், வாக்களிக்க வரும் போது எந்த மாதிரியான முன்னெடுப்பை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் அவர் துபாயில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. GOAT திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக துபாய் சென்றார் விஜய். அவர் லோக்சபா தேர்தலுக்கு தமிழகத்திற்கு வாக்களிக்க வருவார் என கூறப்பட்டு வந்த நிலையில் துபாயில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு விமானங்கள் ரத்தாகியுள்ளன. இன்று விமான சேவையை பொருத்து அவர் தமிழகத்திற்கு வர வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விஜய், நேராக நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.












Click it and Unblock the Notifications