தவெக மாநாடு.. எல்லாமே ரெடி! பந்தலை பாதுகாக்கும் பவுன்சர்கள்! விக்கிரவாண்டியில் விறுவிறு பணிகள்!
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி அருகே வி-சாலைப் பகுதியில் நடைபெற இருக்கிறது. மாநாட்டுக்காக சுமார் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பந்தலுக்கு வர பிற மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி-சாலை பகுதியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மாநாட்டுக்கு தொடக்க நிகழ்ச்சியாக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை கடந்த 4ஆம் தேதி அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் 4.30 மணிக்கு நடைபெற்றது. மாநாட்டு பந்தல், பார்க்கிங், சமையல் கூடம், நுழைவாயில் என பல்வேறு பணிகள் இன்றே தொடங்கவுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற பூஜையில் ஏரளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடுக்கான பந்தல் கால் இன்று அதிகாலை ஊன்றப்பட்ட நிலையில், மாநாடு முடியும் வரை ராணுவ கட்டுப்பாட்டோடு இயங்க வேண்டும் எனவும், நம்மைப் பற்றி நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும் என நடிகர் விஜய் கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் மாநாட்டு ஏற்பாடுகளை நேரடியாக கண்காணித்து வருகிறார் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த்.
மாநாடு நடத்த சுமார் 120க்கு 70 அடி என்ற பரப்பளவில் மாநாட்டு மேடை அமைகிறது. அது மட்டுமல்லாமல் சுமார் 50,000 பேர் வரை அமரும் வகையில் இருக்குகள் அமைக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மாநாட்டு மேடை முழுவதையும் விஜய் சுற்றி வரும் வகையில் ராம்ப் வாக் அமைக்கப்படுகிறது. மேலும் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கினாலும் சேதம் ஏற்படாத வகையில் தரையில் இருந்து சுமார் ஒரு அடி உயரத்திற்கு மேல் பலகைகள் அமைக்கப்பட்டு அதன் மேல் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.
மேலும் பார்க்கிங், மருத்துவ வசதி, சிசிடிவி கண்காணிப்பு என மாநாட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்து இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மாநாட்டு தோரணங்கள், பூ அலங்காரங்கள் ஆகிய பணிகள் மட்டுமே மீதம் இருக்கிறது. மாநாட்டுக்கு முதல் நாள் அந்த பணிகளும் நிறைவடையும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே மாநாடு நடக்கும் பகுதியில் தொடர்ந்து விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தொண்டர்கள் வந்து செல்கின்றனர். இதனால் மாநாடு பணிகள் பாதிப்படைவதாக கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி தீயணைப்புத் துறையினர், காவல்துறையினரும் ஆய்வு என்ற பெயரில் வருவதால் அங்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால் மாநாடு தொடங்கும் நாளுக்கு முதல் நாள் வரை யாரும் வர வேண்டாம் என தவெக தலைமை அறிவுறுத்தி உள்ளது. இருந்த போதும் அங்கு மக்கள் கூட்டம் வருவது குறையவில்லை. இதை அடுத்து அங்கு தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் சார்பில் காவலாளிகளும், பவுன்சர்களும் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications