திருமாவளவன் அண்ணா “தெய்வம்”.. உண்மையான தலைவர்! ஒரு காலத்தில் அப்படி பேசிய காயத்ரியா இப்படி சொல்றது?
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெய்வம் என்று பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்து உள்ளார்.
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெய்வம் என்றும், தன் மனதில் அவர் மீதான பிம்பம் உயர்ந்து இருப்பதாகவும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்து இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமாவளவன் மீது சர்ச்சைக்குரிய காட்டமான கருத்துக்களை தெரிவித்த காயத்ரி ரகுராமின் இந்த மனமாற்றம் பலரை வியப்படைய செய்து இருக்கிறது.
பாஜகவின் டெய்சி - சூர்யா சிவா ஆடியோ தொடர்பாக விமர்சனம் செய்த நடிகை காய்த்ரி ரகுராமை கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுப்பதாக கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தார் அண்ணாமலை.
இதனை அடுத்து தமிழ்நாடு பாஜக நிர்வாகம் மீதும் அண்ணாமலை மீதும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காயத்ரி ரகுராம் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை அவர் முன்வைத்து வருகிறார்.

அண்ணாமலை மீது புகார்
ஹனி டிராப், வார் ரூம் மூலமாக அண்ணாமலை சக பாஜக நிர்வாகிகளையே மிரட்டுவதாகவும் கட்சிக்கு உழைக்காமல் தன்னை விளம்பரம் செய்துகொள்வதாகவும் காயத்ரி குற்றம்சாட்டி வந்தார். 150 பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் அண்ணாமலை தன்னை அவமானப்படுத்தியதாக சாடிய காய்த்ரி ரகுராம் தமிழ்நாடு பாஜகவில் இருந்தே தான் விலகுவதாக அறிவித்தார்.

பாஜகவில் இருந்து நீக்கம்
இதனை தொடர்ந்து அண்ணாமலையும் காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இந்த நிலையில் நேற்று திருமாவளவனை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக காயத்ரி ரகுராம் சந்தித்து பேசினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருமாவளவன் குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளார் காயத்ரி.

திருமாவளவன் ஒரு தலைவர்
அவர் பேசுகையில், "ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசுகிறார் அண்ணாமலை என்று நான் கூறும்போது அவர்கள், திருமாவளவன் அண்ணாவும் தவறாக பேசி இருக்கிறார் என்று சில செய்தி வீடியோக்களை காட்டி கிண்டல் செய்துகொண்டு இருக்கிறார்கள். அங்குதான் திருமாவளவன் அண்ணா தன்னை ஒரு தலைவன் என்று நிரூபித்து இருக்கிறார். அவரது நற்பண்புகளை நான் அங்குதான் பார்த்தேன்.

திருமாவளவனிடம் கேள்வி
அவர் சொன்னதற்கு நான் எதிர் கருத்துகளை தெரிவித்தேன். என் மீதும் தவறு இருந்தது. அவர் கோயில் குறித்து பேசியதிலும் தவறு இருந்தது. என் மீது இருந்த தவறை நான் இல்லை என்று சொல்ல மாட்டேன். அப்படி இருக்கும்போது காயத்ரி ரகுராமை பற்றி தவறாக பேசியது இருக்கிறீர்களே அது சரியா என்று திருமாவளவன் அவர்களிடம் ஒரு கேள்வி கேள்வி எழுப்பப்படுகிறது.

பெண்ணை தவறாக பேசக்கூடாது
அப்போது அது தவறு என்று திருமாவளவன் சொல்கிறார். நான் வருந்துகிறேன் என்று சொன்னார். ஏனென்றால் அவர் ஒரு தலைவர். அவருக்கு உண்மை தெரியும். ஒரு பெண்ணை பற்றி எப்போது தவறாக பேசக் கூடாது. தெய்வத்தை பற்றி பேசினாலும் தவறுதான். பெண்ணை பற்றி பேசினாலும் தவறுதான். அப்படி இருக்கும்போது பாஜக எப்படிப்பட்ட கட்சி? என்றால் இந்துத்துவத்தை கடைபிடிக்கிறது.

திருமாவளவன் தெய்வம்
அப்படி இருக்கையில் நீங்கள் பெண்களையும் தவறாக பேசிக்கொண்டு இருந்தீர்கள் என்றால் தெய்வத்தை, தாய்மார்களை தவறாக பேசுவதை போன்றதுதான். அந்த விசயத்தில் திருமாவளவன் அண்ணாவை பார்க்கும்போது தெய்வம். ஏனென்றால் ஒரு நேர்காணலில் தான் பேசியது தவறு என்று அழகாக திருமாவளவன் சொல்லி இருந்தார். அன்று திருமாவளவன் மீதான பிம்பம் என் மனதில் உயர்ந்துவிட்டது." என்றார்.












Click it and Unblock the Notifications