எனக்கு மாற்றுத் திறனாளி மகன் இருக்கான்.. நான் இல்லாமல் என்ன செய்வான்! கைதின் போது கலங்கிய கஸ்தூரி
சென்னை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் ஹைதராபாத் அருகே கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் போலீசார் கைது செய்ய சென்றபோது கஸ்தூரி கதவை திறக்காமல் இருந்ததாகவும், கைதுக்கு பின் மகனை நினைத்து கண்கலங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பிராமணர்கள் சங்கத்தின் சார்பாக பிராமணர்களுக்கு பாதுகாப்பு வழங்க தனி சட்டம் இயற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கஸ்தூரி பேசியது தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் தெலுங்கு சமுதாய மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட தெலுங்கு பேசும் மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புகார் அளித்தனர்.
தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு, நாயுடு மகாஜன சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புகார் அளித்தன. குறிப்பாக சென்னை எழும்பூர், மதுரை திருநகர், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சென்னை போலீசார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கஸ்தூரிக்கு சம்மன் கொடுக்க சென்றனர்.
ஆனால் வீட்டை பூட்டி விட்டு கஸ்தூரி தலைமறைவானார். இதை எடுத்து அவரை கைது செய்ய போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையின் போது, தெலுங்கு பேசினாலும் அந்த மக்களும் தமிழகத்தின் ஒரு பகுதியினர் தான் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தார். மேலும் கஸ்தூரியின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் கஸ்தூரி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து பப்பலகுண்டாவில் திரைப்பட தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணனின் பங்களாவில் தங்கி இருந்த அவரை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் சென்னை அழைத்து வரப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம் கணவர் ஆதரவில்லாமல் தான் தனிமையில் வசித்து வரும் நிலையில், மாற்றுத்திறனாளி மகன் உள்ளதாகவும், அவன் ஹைதராபாத்தில் படித்து வரும் நிலையில், தான் அங்கே இருந்ததாகவும் தலைமறைவு ஆகவில்லை எனக் கூறியிருந்தார்.
மேலும் தன்னை சிறையில் அடைத்தால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் போலீசார் கைது செய்ய சென்றபோது கதவைத் திறக்காமல் கஸ்தூரி அடம் பிடித்ததோடு மகனை நினைத்து கண்கலங்கியதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணனின் பங்களாவில் உள்ள வீட்டு அறையில் கஸ்தூரி தங்கி இருந்த நிலையில் போலீசார் வருவதை தெரிந்து கொண்டு கதவை உட்புறமாக தாளிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
போலீசார் கதவை தட்டியும் திறக்காததால் உடைத்துக் கொண்டு உள்ளே வருவோம் என எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து வெளியே வந்த கஸ்தூரியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஹைதராபாத்தில் இருந்து அவரை சென்னைக்கு அழைத்து வந்த போது நான் இல்லாமல் தனது மகன் இருக்க மாட்டான் என கண் கலங்கியதாகவும், இரவு உணவு எதுவும் சாப்பிடாமல் வெறும் சாண்ட்விச், ஜூஸ் மட்டுமே வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. மேலும் சென்னையிலும் அவர் சாப்பிடவில்லை என கூறுகின்றனர் போலீசார்.












Click it and Unblock the Notifications