இது லிஸ்ட்லயே இல்லையே.. ஆந்திராவில் புது பங்களா வாங்கிய குஷ்பு.. 2024 தேர்தலுக்கு பலே பிளான்!
நடிகை குஷ்பு 2024 லோக் சபா தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை: பிரபல தமிழ் திரைப்பட நடிகையும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான குஷ்பு 2024 லோக் சபா தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக அம்மாநிலத்தில் புதிதாக பங்களா ஒன்றை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
பிரபல தமிழ் சினிமா நடிகையாக இருப்பவர் குஷ்பு. 80, 90 களில் தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் நாயகியாக இருந்தவர். ரஜினி, கமல், சரத்குமார், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
அதன் பிறகு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த குஷ்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். தற்போதும் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அரசியல்வாதி குஷ்பு
அதேபோல், தனது கணவரும் இயக்குநருமான சுந்தர் சியுடன் இணைந்து பல திரைப்படங்களை தயாரித்தும் வந்தார். இது அல்லாமல் அரசியல்வாதியாகவும் நடிகை குஷ்பு இருந்து வருகிறார். தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்து பணியாற்றிய அவர் பின்னர் அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

பாஜகவில் இணைந்த குஷ்பு
அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து நீண்ட நாட்களாக பணியாற்றி வந்த அவர், கடந்த 2021 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த கட்சி சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியை தழுவினார். கட்சி மற்றும் அரசியல் செயல்பாடுகளிலும் அவர் முன்பை போல் தற்போது தீவிரமாக இல்லை.

தேசிய அரசியலில் குஷ்பு
இந்த நிலையில்தான் அவர் டெல்லி அரசியலுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்காக 2024 தேர்தலில் ஆந்திராவிலிருந்து போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக பிரபல சினிமா பத்திரிகையாளர்கள் தெரிவித்து இருக்கிறார். வலைபேச்சு யூடியூப் சேனலில் பேசிய பத்திரிகையாளர் சக்திவேல், "குஷ்பு தமிழ்நாடு பாஜகவில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இனி தேசிய அரசியலில்தான் முழு கவனத்தை செலுத்த இருக்கிறார்கள்.

ஆந்திராவில் போட்டி
அவர் டெல்லிக்கு போகவில்லை. ஆந்திராவுக்குதான் செல்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அங்குதான் பெரிய பங்களாவை வாங்கி இருக்கிறார்கள். 2024 மக்களவைத் தேர்தலில் அவர் ஆந்திராவில் தான் போட்டியிட இருக்கிறாராம். எனவே அங்கு பங்களாவை வாங்கி முழு நேரமாக அங்கிருந்து டெல்லியை நோக்கி அரசியலை ஆரம்பிப்போம் என்று கிளம்பிவிட்டார்கள்." என்றார்.

ஆந்திராவில் பங்களா
மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவிக்கையில், "குஷ்பு நிறைய தெலுங்கு சீரியல்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். எனவே ஹோட்டல்களில் தங்குவது அசவுகரியமாக இருந்த காரணத்தால் ஆந்திராவிலேயே ஒரு வீடு வாங்கி அங்குதான் தங்குகிறார்கள். அவர் ஆந்திராவில் இருந்து தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுவதில் ஒரு கணக்கு உள்ளது.

குஷ்பு உஷார்
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியால் வெற்றி பெற முடியாது. 50 ஆண்டுகள் கடந்தாலும் அதற்கு வாய்ப்பு இல்லை. எனவே உஷாராக அவர் ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். ஒருவேளை அவர் வெற்றிபெற்றுவிட்டால் பாஜகவில் ஸ்மிருதி இராணியை போல் அமைச்சராகிவிடலாம்." என்று தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications